மாநாடு படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம், இதுதான் தரமான கம்பேக் என சிம்புவை கொண்டாடி வரும் அதேவேளையில், சிம்புவின் பெற்றோரும் மிகுந்து உற்சாகத்தில் உள்ளார்களாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கியது முதல் பல்வேறு பிரச்சனைகளையும், தடைகளையும் சந்தித்து வந்த இப்படம் ரிலீஸ் சமயத்தில் எதிர்கொண்ட பிரச்சனை ஏராளம். முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருந்தனர். அப்போது ரஜினியின் அண்ணாத்த படம் ரிலீசான காரணத்தால், நவம்பர் 25-க்கு படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தனர்.
இதையடுத்து நவம்பர் 25-ந் தான் எங்களுக்கு தீபாவளி என சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்தனர். படத்தின் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சமயத்தில், நவம்பர் 24-ந் தேதி மாலை, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘தவிர்க்க முடியாத காரணத்தால் மாநாடு படம் நாளை ரிலீசாகாது’ என ஒரு டுவிட்டை போட்டார். இது சிம்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது.
பின்னர் அரசியல் தலைவர்களை வைத்து பேசி இரவில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து மாநாடு திட்டமிட்டபடி நாளை ரிலீசாகும் என அறிவித்தனர். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் அதிகாலையில் ஸ்பெஷல் ஷோ போடப்படும். அந்த வகையில் மாநாடு படத்துக்கு அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் அனைவரும் அதிகாலையில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்த சமயத்தில் ஸ்பெஷல் ஷோ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தடையில்லா சான்று கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே இதற்கு காரணமாக அமைந்தது. பின்னர் ஒரு வழியாக காலை 8 மணிக்கு தடையில்லா சான்று கிடைத்தவுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படமும் வேற லெவலில் இருந்ததால், தியேட்டர்கள் திருவிழாக்கோலமானது.
படம் பார்த்த ரசிகர்கள் எல்லாம், இதுதான் தரமான கம்பேக் என சிம்புவை கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால் சிம்புவின் பெற்றோரும் மிகுந்து உற்சாகத்தில் உள்ளார்களாம். குறிப்பாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரோ, ‘இப்போ என் மகனை தொட்டுப்பார்’ என முடியை சிலுப்பிவிட்டு கெத்தாக வலம் வருகிறாராம்.