முடிவுக்கு வந்த வாய்க்கா வரப்புச் சண்டை...இளையராஜாவுடன் இணைந்து மேடையேறுகிறார் எஸ்.பி.பி...

By Muthurama LingamFirst Published May 7, 2019, 4:22 PM IST
Highlights

இசைஞானி-எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த தர்மசங்கடத்திற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இருவரும் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர்.

இசைஞானி-எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த தர்மசங்கடத்திற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இருவரும் மீண்டும் இருவரும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர்.

இளையராஜா ‘டா’ போட்டு அழைக்கும் அளவுக்கு இருவரும் நெர்ங்கிய நண்பர்கள். இந்த நெருக்கத்தினாலேயே இருவருக்கும் இடையில் உரசல் ஏற்படுவதுண்டு. 80 களின் மத்தியில் ஒரு முறை ராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இடையில் தோன்றிய உரசலில்தான் மனோவே ராஜாவால் வளர்க்கப்பட்டார். பின்னர் மீண்டும் சமாதானமார்கள்.

பின்னர் 2017-ம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக புதிய மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். 

ராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். ஆனால் இதை சர்ச்சையாக்கி என்னையும் ராஜாவையும் பிரித்துவிடாதீர்கள்’ என்று கோரியிருந்தார் எஸ்.பி.பி.

ராஜா பாடல்கள் இல்லாமல் எஸ்.பி.பி. கச்சேரி எப்படிக் களைகட்டும்? பிறகு அடுத்த சில மாதங்களிலேயே தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்தார்.

அடுத்து விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடிய சிறுவனைப் பாராட்டும்போது ராஜாவை மனதாரப் புகழ்ந்து பேசி கண்ணீர் விட்டு தனது பேரன்பை வெளிப்படுத்தினார். அதைப்பார்த்த ராஜா நெகிழ்ந்துபோய் தனது உயிர்நண்பனுக்கு போன் செய்து சமரசம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சென்னை - செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் வரும் ஜூன் 2ம் தேதி ராஜாவின் 76வது பிறந்த நாள்  இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி குறித்து கேள்விப்பட்ட எஸ்.பி.பி. தானே முன்வந்து பாடவிரும்பியதாகவும் மேலும் கே.ஜே.ஜேசுதாஸ் உட்பட அத்தனை முன்னணிப் பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் பாட உள்ளதாகவும் தகவல்.

ராஜா பெருசா எஸ்.பி.பி.பெருசா என்று கொஞ்ச காலமாக நடந்த வாய்க்கால் வரப்புச் சண்டைகள் ஒருவழியாக முடிவுக்கு வருகின்றன. 

click me!