நாங்கள் இருவருமே தாய்ப்பாசத்தில் அதிக பற்று கொண்டவர்கள்; தாய் சொல்லை தட்டாதவர்கள்; தாயை தெய்வமாக மதிப்பவர்கள் என எம்ஜிஆர் நட்பு குறித்து சிவாஜி கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவின் மாபெரும் சிகரங்களாக விளங்கியவர்கள் எம்ஜிஆர் - சிவாஜி. படங்கள் முதல் அரசியல் காலம் வரை இருவரும் வெவ்வேறு துறவங்களாகவே நமக்கு தெரியும் ஆனால் இருவரும் இணைபிரியாத நட்பு குறித்து சிவாஜி கணேசன் எழுதியுள்ளதை பார்க்க்கலாம்.
'மதுரை ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.
இரு மலர்களால் தொடுக்கப்பட்ட எங்களுடைய நட்பை பற்றி சொல்ல வேண்டுமானால், கண்ணதாசன் எழுதிய,
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா...
- என்பதைப் போன்றது.
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், 'அம்மா... எனக்கு பசிக்கிறது...' என்று சொல்வார். அதற்கு, 'இரு... கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்...' என்பார் சத்யா அம்மா.
நாங்கள் இருவருமே தாய்ப்பாசத்தில் அதிக பற்று கொண்டவர்கள்; தாய் சொல்லை தட்டாதவர்கள்; தாயை தெய்வமாக மதிப்பவர்கள்.
நன்றி
இவ்வாறு எம்ஜிஆர் நட்பு குறித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனின் கதை (18) ல் குறிப்பிட்டுள்ளார்.