'பணக்காரர்களுக்கு மட்டுமே பதவி தருகிறார் ரஜினி’ மன்ற நிர்வாகிகள் புலம்பல்!

By manimegalai aFirst Published Oct 6, 2018, 4:46 PM IST
Highlights

’ரஜினியின் நீண்டகால விசுவாசிகளுக்கோ, உண்மையான தொண்டர்களுக்கோ கட்சிப் பதவி வழங்காமல் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் தருகிறார் ரஜினி’ என்று ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

’ரஜினியின் நீண்டகால விசுவாசிகளுக்கோ, உண்மையான தொண்டர்களுக்கோ கட்சிப் பதவி வழங்காமல் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் தருகிறார் ரஜினி’ என்று ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

நேற்று வெள்ளியன்று ரஜினியின் போயஸ்கார்டன் வீட்டின் முன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்கிற பாபு தலைமையில் குவிந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரஜினியை சந்தித்து தங்கள் பகுதியில் மன்றத்தை கலைக்கப்போவதாக அறிவிக்க கூடினர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவலாளிகள் ‘ரஜினி வீட்டில் இல்லை. எனவே நீங்கள் கலைந்து செல்லுங்கள்’ என்று கூறினர்.

அதை ஏற்றுக்கொண்டு கலைய மறுத்த கூட்டத்தினர் லதா ரஜினியையாவது சந்திக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். ஆனால் அவரும் வீட்டில் இல்லை என்று கூறப்படவே, சிறிது நேரம் ரஜினிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு, விரக்தியுடன் திரும்பினர்.

பின்னர் இது குறித்து பேட்டி அளித்த ரஜினி மன்ற நிர்வாகி ராமச்சந்திரன் என்ற பாபு, ‘ரஜினியின் நடவடிக்கை எங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக, ரஜினிக்காக உண்மையாக உழைத்தவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே பதவி தரும் முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்ந்தால் நாங்கள் ரஜினி மன்றங்களை முற்றிலும் கலைப்போம். மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி செய்தி அனுப்புவோம்’ என்றார்.

பணக்காரர்களுக்கு மட்டுமே ரஜினி முக்கிய பதவி தருகிறார் என்கிற குற்றச்சாட்டு சமீபகாலமாக தமிழகம் முழுவதுமே வலுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!