நடிகர் சங்க தேர்தல் வழக்கு: 24 தேதி பதிலளிக்க கார்த்தி, விஷால் உள்ளிட்டோருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

By manimegalai aFirst Published Sep 17, 2020, 5:47 PM IST
Highlights

இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. 

அதுமட்டுமின்றி புதிய தேர்தலை நடத்தி முடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் என்பவரை நியமித்த நீதிமன்றம், 3 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

கடைசியாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். எனினும் இந்த வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால், வழக்கு விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர் நீதிமன்றம் அன்றே இறுதிக்கட்ட விசாரணையை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. 

அதன் படி இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24ஆம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்க போகிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். 

இதனால், இன்னும் தீர்வு காணப்படாத நடிகர் சங்க தேர்தல் பிரச்சனைக்கு, 24 தேதி, இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்து பேசி மீண்டும் தேர்தல் நடத்துவதா, அல்லது கடந்தமுறை நடந்த தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுமா என்பதை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!