கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படைத் தலைவர்கள் குஞ்சாலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சாலி மரைக்காயர் வீரதீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து தற்போது ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், சுஹாசினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.
சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த விஷுவல் எபெஃக்ட்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் இப்படத்துக்கு தேசிய விருது வென்றது. அதுமட்டுமின்றி கேரள அரசின் மூன்று விருதுகளையும் வென்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. பிரம்மிப்பூட்டும் காட்சிகளும், வலிமையான வசனங்களும் நிறைந்துள்ள இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி ரேஞ்சுக்கு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.