தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் இலியானா. தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான அவர், விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
அதன் பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவரும் இலியானா, கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர்.
காதல் முறிந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் பாலிவுட்டில் எப்படியும் முன்னணி ஹீரோயினாக உச்சம் தொட வேண்டும் என்ற முனைப்புடன் அவ்வப்போது கிளாமராக ஃபோட்டோ ஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தன் காதலரை விட்டு பிரிந்ததால் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளான இலியானா, அதிலிருந்து மீண்டது குறித்து தெரிவித்துள்ளார். வாரந்தோறும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதால் படங்களில் நடிப்பதை கூட ஒத்தி வைத்திருப்பதாகவும், மன அழுத்தத்தால் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டதால், உடல் எடையும் அதிகமாக கூடி விட்டது என்றும் உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்முக்கு சென்று விட்டு வெளியே வரும்போது அந்த புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுகிறார்கள் என வருத்தத்துடன் தெரிவித்துள்ள இலியானா, அதனாலேயே ஜிம்முக்கு செல்வதையும் தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலியானாவின் நிலைமையை கேட்டு ரசிகர்கள் பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.