இவர்கள் இணைவார்களா ? முடியும் என முயற்சியில் இறங்கியுள்ள சீனு ராமசாமி !! 

First Published Jan 30, 2018, 11:03 AM IST
Highlights
Ilaya raja vairamuthu again make music


இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே தேன் ரகம். கேட்பவர்களை சொக்கிப் போக வைக்கும் இத்தகைய பாடல்கள் வந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏனோ தெரியவில்லை இந்த இரண்டு ஜாம்பவான்களும் இது வரை மீண்டும் இணைந்து பாடல்களைத் தரவில்லை.ரசிகர்களும் இளையராஜா – வைரமுத்து கூட்டணி மீண்டும் உருவாகுமா என ஏங்கித்தான் கிடக்கின்றனர்

இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள ‘மாமனிதன்’ படத்துக்காக கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்க உள்ளார்.  புதுமையான இந்த கூட்டணியில் வைரமுத்துவையும் இணைக்க முடியுமா என களத்தில் இறங்கியிருக்கிறார் சீனு ராமசாமி.

தர்மதுரை படத்தை அடுத்து இயக்குநர் சீனு ராமசாமி கண்ணே கலைமானே என்ற படத்தின் படப்பிடிப்பை நேற்று தொடங்கியுள்ளார்.. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர்  உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தையடுத்து சீனு இயக்கப்   போகும படம்தாள் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன். இந்தப்படத்தில் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

வரும்  ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள  இப்படம் மனித வாழ்வின் முக்கியத்துவத்தை தெளிவு படுத்தும் படமாக இருக்கும் என்றும், யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் என்றும் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.

அப்பா, மகன்கள் என மூவரையும் இணைத்து வைக்கவுள்ள இந்தப்படத்தில் நான்காவதாக வேறு ஒருலவரையும் இணைக்கும் முயற்சியில் சீனு இறங்கியுள்ளார். அது கவிஞர் வைரமுத்துவை இளையராஜாவுடன் இணைப்பதுதான்.

விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய ‘சிறைப்பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ என்ற பாடல்தான் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய கடைசி பாடல். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

கடந்த 2016-ம் ஆண்டில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில் இருவரையும் இணைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது ‘மாமனிதன்’ படத்துக்காக மீண்டும் இளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இயக்குநர் சீனு ராமசாமி இறங்கியுள்ளார்.

இளையராஜா - வைரமுத்து நீண்டகாலமாக பேசிக்கொள்வதில்லை என்றாலும் அண்மையில் இளையாராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு . கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அந்த வாழ்த்தில்  பத்ம விருதுகள்  பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள். பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை

"காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்

வாகை சூடும்… என்ற 'காதல் ஓவியம்' வரிகளால் வாழ்த்துகிறேன்"எனக் குறிப்பிட்டிருந்தார். இதை பாசிடிவ்வாக எடுத்துக் கொண்ட சீனு,  இளையராஜா –வைரமுத்து கூட்டணியை மீண்டும் உருவாக்குவார் என திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

click me!