பாலு சீக்கிரம் எழுந்து வா பாலு; உனக்காக நான் காத்திருக்கிறேன்..! இளையராஜா உருக்கம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Aug 14, 2020, 10:37 PM IST
Highlights

லெஜண்ட் பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவிலிருந்து மீண்டு வர வேண்டி உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார்.
 

இந்தியாவின் மிக பிரபலமான பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே, அதை உடனடியாக சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தி, தனது உடல்நிலை சீராக உள்ளதையும் தெளிவுபடுத்தியிருந்தார் எஸ்.பி.பி.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில், திடீரென இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்திருந்தது. அவரது உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததாகவும், அதைத்தொடர்ந்து அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டதாகவும் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலை கேட்டு தேசம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் பிரபலங்களும், எஸ்பிபி விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்திவருகின்றனர். தனது இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்த எஸ்பிபி குணமடைய வேண்டும் என்று கோடானகோடி மக்கள் விருப்பம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் வேண்டுதலும் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், எஸ்பிபி-யின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா, எஸ்பிபி குணமடைய வேண்டி உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பாலு சீக்கிரம் எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன். சினிமாவில் தொடங்கி சினிமாவில் மட்டுமே முடிவதல்ல நமது வாழ்க்கை. சினிமாவுக்கு முன்பே மேடைக்கச்சேரிகளில் ஒன்றாக இசை பயணத்தை தொடங்கினோம். நமக்குள் எத்தனை சண்டைகள் நடந்தாலும், அவையெல்லாம் நமது நட்பை ஒருபோதும் பாதித்ததில்லை. நீ மீண்டு வருவாய் என எனது உள்ளுணர்வு சொல்கிறது. அதுவே உண்மையாகட்டும். பாலு.. சீக்கிரம் வா என்று இளையராஜா உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

இதற்கிடையே, எஸ்பிபியின் மகன் சரண், எஸ்பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

click me!