’போதையேறிப்போச்சு’...கஞ்சா அடித்துவிட்டு ஷூட்டிங் நடத்திய கேமரா மேன், கதாநாயகன் கைது...

By Muthurama LingamFirst Published May 4, 2019, 11:55 AM IST
Highlights

கேரளாவில், குறிப்பாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,  சினிமா படப்பிடிப்பு தளத்தில் கஞ்சாவுடன் இருந்த கதாநாயகனும், கேமரா  மேனும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம்  மலையாள திரையுலகில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கேரளாவில், குறிப்பாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில்,  சினிமா படப்பிடிப்பு தளத்தில் கஞ்சாவுடன் இருந்த கதாநாயகனும், கேமரா  மேனும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம்  மலையாள திரையுலகில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத் திரையுலகினர் பலரும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது தொடர்ந்து செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா படப்பிடிப்பு  தளங்களிலும் போதை  பொருள் கடத்தப்படுவதாக கொச்சி கலால்துறைக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து  ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் அதிகாரிகள்  கொச்சியில் சினிமா படப்பிடிப்பு  நடைபெறும் ஸ்டுடியோக்களை ரகசியமாக  கண்காணித்தனர். 

அப்போது, கொச்சியில் ஒரு ஸ்டுடியோவில்  ’ஜமீலான்டெ பூவன்கோழி’ என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.  அங்கு கலால் துறையினர்  அதிரடி சோதனை நடத்தினர். அப்போது படத்தின்  கதாநாயகனும், அறிமுக நாயகனுமான கோழிக்கோட்டை சேர்ந்த மிதுன் (25) மற்றும் கேமராமேனான பெங்களூரூவை சேர்ந்த விஷால் வர்மா ஆகியோரிடம் கஞ்சா இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து, இருவரையும் கலால்துறையினர் கைது செய்தனர்.  இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சாவுடன் சிக்கிய கதாநாயகன் மிதுன், கேமராமேன் விஷால் வர்மா ஆகிய இருவரிடமும்  நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான  தகவல்கள் கிடைத்துள்ளன. இருவரும் கடந்த 2 மாதங்களாக கொச்சியில் உள்ள  விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் கஞ்சா பயன்படுத்தி வந்துள்ளனர். கொச்சியை சேர்ந்த கும்பல் தினமும்  இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

 உற்சாகமாகப் படப்பிடிப்பு நடத்தவும், படப்பிடிப்பு முடிந்த பிறகு களைப்பை  போக்கவும் கஞ்சாவை பயன்படுத்தியதாக இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதற்கு முன்னர் கேரள திரையுலகில் வெளிவந்த பல பாலியல் விவகாரங்களிலும் போதைப்பொருள் ஒரு முக்கிய காரணியாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

click me!