ரஜினிக்கு ரிவிட் வைத்த பி.வாசு! பழிக்கு பழிவாங்கி சந்தோஷம்: சந்திரமுகி 2 வரும் ஆனா வராது!

By Vishnu PriyaFirst Published Jan 13, 2020, 6:43 PM IST
Highlights

எப்படியென்றால் ரஜினிக்கே இந்த ‘வேட்டையன்’ கதை மீது ஆர்வம் இருப்பதால், அவரே வாசுவிடம்  நேரடியாக பேசிவிடுவார்! எனும் நம்பிக்கைதான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பல சறுக்கல்கள் நடந்திருக்கின்றன. ‘கண்ணா, இனி அவர் அவ்ளோதான். என்னா!’ என்று அவர் ஸ்டைலிலேயே அவருக்கு கோலிவுட் மாயா உலகம் கதம்! கதம்! கூறப்பார்த்த சம்பவங்கள் ஏராளம். ஆனால் அப்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக ஏதோ ஒரு இயக்குநரின் கரம் & கதை அவருக்கு கைகொடுத்து, மீண்டும்  வெற்றியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தும். இன்று நேற்றல்ல அந்த காலத்திலிருந்தே இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ...என்று அவர்களைப் பட்டியலிடலாம். 

இவர்களில் பி.வாசு மிக முக்கியமாவனவர். காரணம் ரஜினியை வைத்து அவர் இயக்கிய படங்களில் மன்னன், சந்திரமுகி இரண்டும் மிக முக்கியமானவை, தாறுமாறான ஹிட்டானவை. அதிலும் சந்திரமுகியானது  ரெக்கார்டே பண்ணியது. இத்தனைக்கும் நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த ரஜினியை மீண்டும் பழைய எனர்ஜியுடன் திரைக்கு அழைத்து வந்து கோலாகல வெற்றியைக் கொடுத்த படம் அது. இதனால் வாசு மீது ரஜினிக்கு பெரிய வாஞ்சையுண்டு. 
இது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது ரஜினியின் தர்பார் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினி பெரிதும் எதிர்பார்த்து ஆனால் ஏமாற்றமடைந்த படங்களில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. ‘என் கேரியர்லேயே மிக முக்கியமான படம். ரொம்ப ஸ்டைலியா, த்ரில்லிங்கா வந்திருக்குது.’ என்று ரஜினியே மேடைக்கு மேடை இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்தார். ஆனாலும் படம்  சரிந்துவிட்டது என்பதுதான் உண்மை. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினிக்கும், தர்பார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் இடையில் பெரிய புரிதல் உருவானது. அப்போது, ரஜினியின் சில படங்களைப் பற்றி  நுணுக்கமாக பேசிய முருகதாஸ், சந்திரமுகி படத்தில் வரும் வேட்டையன் கேரக்டரை ரொம்பவே புகழ்ந்து தள்ளினார். கூடவே அந்த கேரக்டரை  பிரதானமாக வைத்து ‘சந்திரமுகி - 2’ எடுக்க ஆசைப்படுவதாக அவரிடம் சொல்ல, ரஜினியும் சர்ப்பரைஸ் சிரிப்புடன்  கிட்டத்தட்ட ஓ.கே. என்பது போல் தலையாட்டினார். இதில் முருகதாஸுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். காரணம், ரஜினியின் ஆர்வம் கிட்டத்தட்ட சம்மதம் போலவே அவருக்கு உணர்த்தியது. எனவே தர்பார் ஷூட் முடியும் வேளையிலேயே வேட்டையன் கேரக்டரை தனியாக மனதினுள் டெவலப் பண்ண துவங்கியிருந்தார். ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவுடனான படத்தை முடித்துவிட்டு வந்ததும், இந்தப் படத்தை துவக்குவது போல்  அதிகாரப்பூர்வமற்ற பிளான்களே உருவாகின. 

இந்த நிலையில், தர்பார் பட ப்ரமோஷன் போது ஒரு பேட்டியில் ‘ரஜினி சார் சந்திரமுகியில பண்ணியிருந்த வேட்டையன் கேரக்டர் ரொம்ப சூப்பரானது. அதை தனியா வெச்சு சந்திரமுகி 2-வே எடுக்கலாம். எனக்கு ஆசையிருக்குது. வாய்ப்பு கிடைச்சா இயக்குவேன்’ என்று ஓப்பனாக அதை சொல்லி, சந்திரமுகியின் இயக்குநர் பி.வாசுவுக்கு நைஸாக சேதி சொன்னார் முருகதாஸ். அவர் நினைத்தது போலவே இது வாசுவின் கவனத்துக்குப் போய்விட்டது. அடுத்த கட்டமாக அவரிடம் சந்திரமுகி -2 பற்றிய உரிமைகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியது முருகதாஸ் வட்டாரம். என்னதான் அப்படத்தின் தயாரிப்பு, சிவாஜியின் அன்னை ஃபிலிம்ஸ் என்றாலும் கூட, இயக்குநர் வாசுவால் தான் அந்தப் படம் மரணமாஸ் ஹிட்டடித்தது. எனவே வாசுவிடம் முதலில் அணுக சொல்லி ரஜினிதான் முருகதாஸ் தரப்புக்கு சிக்னல் கொடுத்திருந்தாராம். வாசு சம்மதித்துவிடுவார், அதன் பிறகு செம்ம ஈஸியாக பிரபு டீமிடம் அடுத்த சம்மதங்களை வாங்கிடலாம் என்பது எண்ணம். 

ஆனால் முருகதாஸ் தரப்பு அணுகியதுமே பி.வாசு செம்ம டென்ஷனாக ரியாக்ட் செய்திருக்கிறார். ‘நான் வேற ஹீரோவை வெச்சு சந்திரமுகி 2- தயார் பண்ணிட்டிருக்கேன். அதனால ஸாரி!’ என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டாராம். இது ரஜினியின் ஆசை என்பது பி.வாசுவுக்கு நன்கு தெரிந்திருந்தும் கூட அவர் இப்படி ரியாக்ட் செய்ய காரணம், பழிவாங்கும் உணர்வுதான். ரஜினியை ஏன் வாசு பழிவாங்கணும்? காரணம் இருக்கே!...அதாவது ரஜினியின் மார்க்கெட் சரிந்து கிடந்த காலங்களில் கைகொடுத்தது வாசுதான். அதிலும் சந்திரமுகியோ ரஜினிக்கு பெண்கள் மத்தியில் மிக மிக பெரிய வரவேற்பை உருவாக்கி கொடுத்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக வாசுவுக்கு வாய்ப்பு இல்லை. அவரும் தனக்கு ஒரு படம்  ஓ.கே. பண்ணச் சொல்லி பல முறை ரஜினியிடம் கேட்டுவிட்டார். ஆனால் ரஜினி வாய்ப்பு தராமல் தட்டிக் கொண்டே உள்ளார். மேலும் தன் மகன் சக்திக்கு ரஜினியின் படங்களில் வாய்ப்பு தந்து வளர்த்துவிட சொல்லியும் நைஸாக வாசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு அதுவும் பெண்டிங்கிலேயே கிடக்கிறதாம்.

 

இதில் ரஜினி மீது வாசுவுக்கு ஏக வருத்தமும், கோபமும். சந்திரமுகி -2 உட்பட சில கதைகளை வாசு சொன்ன பின்னும் ரஜினியிடமிருந்து பாசிடீவ் சிக்னலே இல்லை. ’பார்ட் 2 என்னைக்குமே சாருக்கு சரிப்பட்டு வராது!’ என்று வாசுவுக்கு செக் வைத்துவிட்டதாம் ரஜினியின் அலுவலக தரப்பு. இந்த நிலையில், தான் அன்று கஷ்டப்பட்டு உருவாக்கிய ‘வேட்டையன்’ கேரக்டரை பகுமானமாக முருகதாஸ் அபேஸ் பண்ண நினைக்க, அதற்கு ரஜினியும் தலையாட்டுவதால் அதிருப்தியின் உச்சத்துக்கு போன வாசு இப்படி ரிவிட் வைத்துவிட்டார். வாசுவின் இந்த மறுப்பை, ரஜினியிடம் முருகதாஸ் தெரிவித்து ‘ச்சே! ரொம்ப எதிர்பார்த்தேன் சார். வேட்டையன் கேரக்டரை வெச்சு சூப்பர் ஸ்டோரில் டெவலப் பண்ணியிருந்தேன்’ என்று ஃபீல் பண்ணியிருக்கிறார். உடனே ரஜினியும் ‘விடுங்க. நடக்கணும்னு இருந்தால் நிச்சயம் நடக்கும்.’ என்றாராம் முருகதாஸிடம். இதனால் முருகதாஸ் ஹேப்பி ஆகியிருக்கிறார். எப்படியென்றால் ரஜினிக்கே இந்த ‘வேட்டையன்’ கதை மீது ஆர்வம் இருப்பதால், அவரே வாசுவிடம்  நேரடியாக பேசிவிடுவார்! எனும் நம்பிக்கைதான். அப்படின்னா வாசு மகன் ஷக்திக்கு அந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்குதுன்னு சொல்லுங்க! வாசு சார்....இவ்வளவுதானா உங்க டக்கு!?

 

click me!