தொடர்ந்து அவரை அசிங்கப்படுத்துறது, கேட்டா ‘நானும் ரஜினி ரசிகன் தான்னு சப்பைக்கட்டு...என்ன ‘கோமாளி’த்தனம்?...

By Muthurama LingamFirst Published Aug 7, 2019, 4:16 PM IST
Highlights

இந்தக் ‘கோமாளி’படக்குழுவினர் ரஜினிக்கு எதிராக அடிக்கும் கூத்துக்களுக்கு இப்போதைக்கு முடிவே வராதுபோல. ட்ரெயிலருக்கு அடுத்து வெளியான ரஜினியை நக்கலடிக்கும்  பாடலுக்கு விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து ‘நானும் ரஜினி ரசிகன் தான்’என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
 


இந்தக் ‘கோமாளி’படக்குழுவினர் ரஜினிக்கு எதிராக அடிக்கும் கூத்துக்களுக்கு இப்போதைக்கு முடிவே வராதுபோல. ட்ரெயிலருக்கு அடுத்து வெளியான ரஜினியை நக்கலடிக்கும்  பாடலுக்கு விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து ‘நானும் ரஜினி ரசிகன் தான்’என்று பரிதாபமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் கடந்த 3ம் தேதி  இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருந்தார்கள்.

அதற்கு கிடைத்த கண்டனங்களால் ட்ரெயிலரில் இருந்த ரஜினி காட்சிகள் நீக்கப்பட அடுத்து மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு ரஜினியின் வயதை பங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடல் வரிகளில் ‘சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிடுச்சே.இப்ப பேத்தி எல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே’என்று அவரது வயதையும் பேத்தி வயதுப்  பெண்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலாக்கியுள்ளது.

இந்தப் பாடல் குறித்த எதிர்ப்புகள் அதிகமானவுடன் சம்மன் இல்லாமலே ஆஜராகியிருக்கிறார் வைரமுத்துவின் வாரிசு கபிலன் வைரமுத்து. படத்தின் இயக்குநர், ஹீரோ ஜெயம் ரவி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போலவே ‘நானும் தீவிர ரஜினி ரசிகன் தான்’என்று துவங்கி அல்வா கிண்டியிருக்கும் அவர்,  மூன்று தலைமுறைகள் தாண்டியும் ரஜினி ரசிக்கப்படுவதாலேயே தான் அந்த  பாட்டி,பேத்தி வரிகளை எழுதியிருப்பதாக சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.

click me!