உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த ரஜினி,விஜயகாந்த் பட வில்லன்...

By Muthurama LingamFirst Published Feb 10, 2019, 12:46 PM IST
Highlights

மும்பை அந்தேரியில் உள்ள தனது ஃப்ளாட்டில் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் குறித்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவருக்கு வயது 57.

மும்பை அந்தேரியில் உள்ள தனது ஃப்ளாட்டில் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் குறித்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவருக்கு வயது 57.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தில் ’ஐ அம் ஏ பேட் மேன்’ என்ற வசனத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானவர்  இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த். இந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சன்னி தியோல், சஞ்சய் தத், கோவிந்தா உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை எனலாம். 

தமிழில் இவர் விஜயகாந்த் நடித்த ’பெரிய மருது’, ரஜினி நடித்த ’வீரா’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் இதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் நடிகை உஷா பச்சானி யை காதலித்து கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். பின் 2 வருடத்திலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார் மகேஷ் ஆனந்த். 

அடுத்து  அவருக்கு நடிக்க வாய்ப்பும் வரவில்லை. இதனால் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். வருமானம் இல்லாததால் பணத்துக்கு கஷ்டபட்டு வந்தார். 18 வருடத்துக்கு பிறகு நடிகர் கோவிந்தாவின்’ரங்கீலா ராஜா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அந்த படம், கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் அவர் வீட்டில் வேலைபார்க்கும் பெண் வழக்கம் போல நேற்று வந்து கதவைத் தட்டினார். நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மகேஷ் ஆனந்த் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் சில மதுபாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து அவர் உடலை, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஷ் ஆனந்த் மறைவை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!