பிக் பாஸ் 3 ஆவது சீசன் 23 ஆம் தேதி தொடங்குமா ? தடை செய்யப்படுமா ?

By Selvanayagam PFirst Published Jun 19, 2019, 9:15 PM IST
Highlights

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் 23 ஆம் தேதி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

ஸ்டார் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.  கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பெரும் ரசிகர்களையும் பெற்றிருந்தனர். நடிகை ரித்விகா வெற்றி பெற்றிருந்த இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை 'ஐபிஎஃப்' எனப்படும் ‘இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின்’ தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இதன் காரணமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேட்டிற்கு காரணமாய் இருப்பதாகக் கூறி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கவர்ச்சிகரமான உடைகள் அணியப்படுவதாகவும், இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுவதாகவும் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அதே நேரம் பரவலாக ரசிகர்களின் ஆதரவையும் பெற்று இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.

தற்போது நிகழ்ச்சிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்படுமா? அல்லது தடை விதிக்கபடுமா என கேள்வி எழுந்துள்ளது.

click me!