தப்பு தப்பு தானே!! பயங்கரமா திட்டி ட்வீட் போட்ட ஆண்ட்ரியா, ஜிப்ரான்... திணறும் வைரமுத்து!!

By sathish kFirst Published Oct 11, 2018, 4:16 PM IST
Highlights

சுவிட்சர்லாந்த் ஹோட்டலில் தங்கியிருந்த வைரமுத்து  தம்மை தனியாக வரசொல்லியும், தமக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி கூறியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவாகத் திரைத் துறை, பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

2004ஆம் ஆண்டு வீழமாட்டோம் ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்தின் போது அவருடைய தாய் பத்மாசினி உடனிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பத்மாசினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் வைரமுத்து சார்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் என்பவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறினார்.

சின்மயியின் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு என் இன்னும் பதில் சொல்லவில்லை என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில், “அப்போது நாங்கள் கூறியிருந்தால் நம்பியிருக்க மாட்டீர்கள். இப்போதுள்ள சூழல் காரணமாக அனைவரும் இதற்குச் செவிமடுக்கின்றனர்” எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”  ட்வீட் போட்டு பதில் கொடுத்திருந்தார். இதற்கு பதில் சொன்ன சின்மயி " பொய்யர்" என ஒரே வார்த்தையில் பதிலடிக் கொடுத்தார். 

இந்நிலையில், சின்மயிக்கு ஆதரவாக சமந்தா, ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் ஜிப்ரான், டான்ஸ் மாஸ்டர் கல்யான் என ஒவ்வொருவராக வெளியில் வந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து  இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்ட பதிவில், “சின்மயி நான் உங்களை மதிக்கிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். நன்றி” என்று பதிவிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த சின்மயி, “ஜிப்ரான் நான் உங்களுக்குக் கடன்பட்டுள்ளேன். என்னை நம்பியதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

அதேபோல நடிகை ஆண்ட்ரியா, “பத்து வருஷத்துக்கு முன்போ, ஐம்பது வருஷத்துக்கு முன்போ... தப்பு தப்பு தானே. உண்மை எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்துவிடும். பயம் இல்லாமல் நாங்கள் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பெருகிவரும் ஆதரவை ஒரு சமூக சேவையாக மாற்ற, நீங்கள் பாதிக்கப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும் மறைக்காமல் வெளியே சொல்லுங்கள் என சின்மயி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பலனாக பலரும் சின்மயியின் இன்பாக்ஸில் தாங்கள் பாதிக்கப்பட்டவற்றைப் பற்றிப் பேசியிருக்கின்றனர். “நான் பாதிக்கப்பட்டதை என் கணவரிடம் தைரியமாகச் சொன்னேன். அந்த நபரை நேரடியாகச் சென்று கேட்டபோது, அவரது மகளும் இப்படி பாதிக்கப்படுவதை அறிந்து அதிர்ந்துபோனோம்’ என ஒருவர் சின்மயிக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.

“பாலியல் குற்றங்களை செய்யும் மிருகங்கள், யாரிடமாவது தங்களது செயலைப் பெருமையாக சொல்லும். அவர்களே அவ்வளவு தைரியமாகப் பேசும்போது நாம் ஏன் அமைதியாக இருக்கவேண்டும். அவர்களின் பெயரை வெளியே சொல்லி உலகத்தின் முன் நிறுத்துவோம்” என்று தொடர்ந்து அடுத்தடுத்த ட்வீட் மூலம் வெளியிட்டு வருகிறார்.

click me!