ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மலையாளப் படத்தில் ஒப்பந்தமான ஓவியா சேச்சி...

By Muthurama LingamFirst Published Aug 15, 2019, 3:14 PM IST
Highlights

சரியாக 9 ஆண்டுகளுக்குப் பின் தன் தாய்வீடான  மலையாளத் திரையுலகம் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் பிக்பாஸ் மூலம் ஆர்மி கொண்டு ஆண்டவருமான ஓவியா. அங்கு அவர் ‘பிளாக் காபி’என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சரியாக 9 ஆண்டுகளுக்குப் பின் தன் தாய்வீடான  மலையாளத் திரையுலகம் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் நடிகையும் பிக்பாஸ் மூலம் ஆர்மி கொண்டு ஆண்டவருமான ஓவியா. அங்கு அவர் ‘பிளாக் காபி’என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஓவியா, மலையாளத் திரையுலகில்தான் அறிமுகமானார். அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் ’நாளை நமதே’ என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ‘களவாணி’படத்தின் ஆரவாரமான வெற்றி அவரைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றியை ருசிக்க முடியாமல் இருந்த  ஓவியாவைத் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடித் தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம். தமிழகம் முழுக்க அவருக்கு ஆர்மிகள் அமைக்கப்பட்டு பல இளைஞர்கள் அதில் இணைந்து பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றனர்.

அடுத்து ஏனோ அவருக்குத் தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை.  நடுவில் வந்த ‘90 எம்.எல்’என்ற அடல்ட் படம் அவரது செல்வாக்கை இன்னும் கொஞ்சம் காலி செய்ததுஇடையில் கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த ஓவியா 2011ஆம் ஆண்டுக்குப் பின் மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.பாபுராஜ் இயக்கும் ’பிளாக் காபி’ படத்தில் இணைந்துள்ள இவர், படம் பற்றி கூறும் போது, “இது ஒரு காதல் கதை. இதில் நான் ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறேன். எனது கதாபாத்திரம் தனது துறையில் முத்திரை பதிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறவுச் சிக்கல்கள் குறித்தும் படம் பேசும். மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை. பாபுராஜ்தான் என்னை நடிக்கச் சொல்லி தூண்டினார். அவரை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். மேலும், நல்ல கதை என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தாய் வீட்டுக்குப் போனது ஓ.கே. ஆனால் தமிழ் நாட்டுக்கு சீக்கிரம் திரும்ப வந்துருங்க ஓவியா. எங்கள மாதிரி பாசக்காரப் பயலுகள உங்களால வேற எங்கேயும் பார்க்க முடியாது’.

click me!