அரசியலில் ஈடுபடபோவதாக வெளியாகும் தகவல்களுக்கு ட்விட்டர் மூலம் நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.
‘பசுமை கலாம்’ என்ற பெயரில் தமிழகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுவருபவர் நடிகர் விவேக். அரசியல் தொடர்பாக பட்டும் படாமல் கருத்து தெரிவிப்பதும் விவேக்கின் வாடிக்கை. தியேட்டர்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்துவருகிறார். தற்போது தேர்தல் காலம் என்பதால், நடிகர் விவேக் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற தகவல் பரவிவருகிறது.
அப்படி பரவும் செய்தி உண்மையில்லை என்றும், அது வதந்தி என்றும் நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், “இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்தக் கட்சியிலும் அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதைச் செவ்வனே செய்வேன். அனைத்துக் கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்திருக்கிறார்.
சமூகம் சார்ந்து அவ்வப்போது கருத்து தெரிவித்துவரும் நடிகர் விவேக், தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.