ஒரு மனிதனால் இப்படி இருக்க முடியுமா?... நன்றி மறவேன் பாலு சார்... எஸ்.பி.பி.க்காக கதறி துடித்த சிம்பு....!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 25, 2020, 6:59 PM IST
Highlights

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது உருக்கமான இரங்கலை அறிக்கையாக பதிவு செய்துள்ளார்.

16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த இசையரசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.04 மணி அளவில் நம்மை எல்லாம் விட்டு மறைந்தார். தனது குரலால் சோகங்களை மறக்கடித்த அந்த மேதை, அனைவரையும் மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். எஸ்.பி.பி-யின் மறைவிற்கு  பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அரசியல் கட்சியினரும், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர் என பல்லாயிரக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது உருக்கமான இரங்கலை அறிக்கையாக பதிவு செய்துள்ளார். “எத்தனை ஆயிரம் பாடல்கள்??  பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். 

சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள... உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர். 

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பட வந்திருந்தார்.

குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். 

என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.. 

 அதைப்போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் இவன் தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். 

முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்...

விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன்.  பாடு நிலாவே... லவ்யூ -  சிலம்பரசன்
 என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

click me!