’கைதி’படத்தின் முழுக்கதையையும் துணிச்சலாக வெளியிட்ட கார்த்தி....

By Muthurama LingamFirst Published Oct 24, 2019, 3:30 PM IST
Highlights

அனைத்துப் பணிகளும் முடிந்து இப்படத்தைப் பார்க்கும்போது இதன் இரண்டாம் பாகம் ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல் வருகிறது.இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது டில்லி என்கிற என்னுடைய கதாபாத்திரம் தான். 10 வருடம் சிறைவாசம் இருந்துவிட்டு வெளியே வந்த கதாபாத்திரம்.சிறையில் இருக்கும்போது அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண் குழந்தையை அவன் பார்த்ததே இல்லை. அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்பது கூட அவனுக்குத் தெரியாது.

நாளை தீபாவளிக்கு உடன் ரிலீஸாகவிருக்கும் ‘பிகில்’படத்தின் கதை பல்வேறு முனைகளில் சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், சற்றும் தயக்கமின்றி, தனது ‘கைதி’படத்தின் முழுக்கதையை மனம் திறந்து கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி. அத்துடன் கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஒரு படத்தில் நடிக்க முன் வந்தது ஏன் என்றும் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,

அனைத்துப் பணிகளும் முடிந்து இப்படத்தைப் பார்க்கும்போது இதன் இரண்டாம் பாகம் ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல் வருகிறது.இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது டில்லி என்கிற என்னுடைய கதாபாத்திரம் தான். 10 வருடம் சிறைவாசம் இருந்துவிட்டு வெளியே வந்த கதாபாத்திரம்.சிறையில் இருக்கும்போது அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண் குழந்தையை அவன் பார்த்ததே இல்லை. அந்தக் குழந்தை எப்படி இருக்கும் என்பது கூட அவனுக்குத் தெரியாது.

அவன் குழந்தையைப் பார்க்க நினைக்கும்போது ஏராளமான தடைகள் வருகின்றன. 4 மணி நேரத்திற்குள் அவன் பார்த்தாக வேண்டும். ஆனால், பார்க்கக் கூடிய வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதிலிருக்கும் திரில், இரவு நேர சாலைப் பயணத்தில் அடுத்து என்ன ஆபத்து வரும் என்று தெரியாது. படம் ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே க்ளைமேக்ஸ் ஆரம்பித்து விடும்.அதிலிருந்து முடிவு வரை இறுதிக்கட்டம் தான். சண்டை, நடிப்பு இரண்டுமே இருக்கும். நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்பதால் இந்தக் கதாபாத்திரத்துடன் என்னை சுலபமாகப் பொருத்திக் கொள்ள முடிந்தது.

அதேபோல, பொழுதுபோக்கான படமும் கூட. டப்பிங் பேசும்போது இசை, ஒளிப்பதிவு, காட்சிகள், என்னுடைய நடிப்பு எல்லாமே புதுமையாக நன்றாக வந்திருக்கிறது.என்னுடைய காட்சிகளைப் படமாக்க 36 நாட்கள் ஆகின. எல்லாமே முடிந்து முழுப் படமாக பார்க்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. பாடல் இல்லை, காதல் காட்சிகள் ஆனால், கதைக்கு அவை இரண்டுமே தேவைப்படவில்லை.

துவக்கத்தில் இப்படத்தின் கதையை என்னிடம் சொல்ல வரும்போது,புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல இருக்கும் என்று தோன்றியது. பல கதாபாத்திரங்கள், பல மாஸ் காட்சிகள் என்று ஒரு கதைக்குள் பல விஷயங்கள் இருக்கிறது. அதிலும் அந்தக் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் நரேனைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று லோகேஷ் கூறியதும், நான் தான்  நரேனிடம் பேசினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

நண்பருடன் சேர்ந்து திரைப்படத்திற்குச் செல்லலாம். ஆனால், நண்பருடன் இணைந்து திரைப்படம் எடுப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இருவரும் எப்போதும் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருப்போம். அதில் என்னென்ன வித்தியாசங்களைக் கொண்டு வருவது என்பது பற்றி பேசும்போது பிடித்தது, பிடிக்காதது என்று இருவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கும். இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்போம் என்று இதுவரை கற்பனைகூட செய்ததில்லை. இயக்குநர் லோகேஷ் மூலம் தான் சாத்தியமானது என்று கூறினார் கார்த்தி.

click me!