முன்னணி நடிகர்களுக்கு கூட இந்த மனசு வராது..! இந்த வருடம் முழுவதும் சம்பளமே வேண்டாம் என கூறிய பிரபல நடிகர்!

By manimegalai aFirst Published May 9, 2020, 3:05 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட அருள்தாஸ், கொரோனா ஊரடங்கு காரணமாக, மிகவும் பின்னடைவை சந்தித்துள்ள திரையுகிற்கும், தயாரிப்பாளர்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இந்த வருடம் முழுவதும், தான் நடிக்க உள்ள படங்களுக்கு சம்பளமே வாங்க போவது இல்லை என அறிவித்துள்ளார்.
 

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட அருள்தாஸ், கொரோனா ஊரடங்கு காரணமாக, மிகவும் பின்னடைவை சந்தித்துள்ள திரையுகிற்கும், தயாரிப்பாளர்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவியாக இந்த வருடம் முழுவதும், தான் நடிக்க உள்ள படங்களுக்கு சம்பளமே வாங்க போவது இல்லை என அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது... மதுரையில் இருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். பிறகு சினிமாவில் உதவி கேமராமேன், அடுத்த கட்டமாக கேமராமேன். பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து வளர்ந்து, இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரியும் அளவுக்கு வந்திருக்கிறேன். 

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம்தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி, தொடர்ந்து 'சூது கவ்வும்', 'பாபநாசம்', 'தர்மதுரை', 'காலா' உள்பட பல படங்களில் இப்போது வரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், திரைப்படத்துறை நண்பர்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி. 

வாய்ப்பு கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்களாகிய முதலாளிகள். இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என்று அனைத்து வசதிகளையும் தந்தது அவர்கள் தந்த பணத்தினால்தான். இந்த நேரத்தில் எனக்கு சம்பளம் கொடுத்து என் வாழ்வை மேம்படுத்த உதவிய முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

தற்போது கோவிட்-19 என்ற கொடிய வைரஸ் பரவல் காரணமாக, சினிமா துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. என்றாலும், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரகள் தொடங்கி, பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை உதவிகள் செய்து வருகின்றனர். 

நானும் சினிமா நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் இயன்றவரை உதவிகள் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளின் காரணமாக, வரும் சில மாதங்களுக்கு சினிமா தயாரிப்பதும், அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியம். அதை மனதில் கொண்டு, தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குனர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக்கொள்வதாக கூறியது பாராட்டத்தக்கது. 

இது ஒரு நல்ல தொடக்கம். அதுபோல், என் திரையுலக வாழ்க்கையை மேம்படுத்த உதவிய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

அதன் காரணமாக, இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் கடைசி வரை நான் புதிதாக நடிக்கும் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல், என்னுடைய உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும், என் இயக்குனர் சகோதரர்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன். நான் பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகன் இல்லை. ஒரு சாதாரண நடிகன்தான். எனக்கும் தேவைகள் இருக்கிறது.. அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்து அல்லது நண்பர்களிடம் உதவியாகப் பெற்று சில மாதங்கள் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த தமிழ்த் திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில், உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத்தரும் என்று நம்புகிறேன். இலையுதிர் காலத்துக்குப் பிறகு மரங்கள் துளிர்விட்டு மிகவும் பசுமையான வசந்த காலத்துக்கு காத்திருப்பது போன்று, நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம். என  அருள்தாஸ் கூறியுள்ளார். இவைரன் இந்த முடிவும், இப்படி பட்ட மனதும் பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில், கோடி கோடியாய் சம்பளம் பெரும், பிரபலங்களுக்கு கூட இந்த மனசு வரமா என்றால் அது சந்தேகமே?

click me!