நாங்களும் எடுப்போம்ல.... ஜாக்கிசானை வைத்து அந்நியன் ரீமேக் - ஷங்கருக்கு ஷாக் கொடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்

By Ganesh PerumalFirst Published Nov 24, 2021, 3:46 PM IST
Highlights

முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவரையும், ஜாக்கி சானையும் வைத்து ‘அந்நியன்’ படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம். 

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'அந்நியன்'. பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். 

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார். அப்படத்தை பென் மூவிஸ் தயாரிக்கவுள்ளதாகவும்,  பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ராம்சரண் படத்தை முடித்த பின்னர் அந்நியன் ரீமேக்கை இயக்க உள்ளதாக ஷங்கர் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பு வெளியானதும் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையே மோதல் உருவானது. இருவருமே கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறினர். 

அவர்களுக்கும் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். 

முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவரையும், ஜாக்கி சானையும் வைத்து ‘அந்நியன்’ படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம். படப்பிடிப்பு பணிகளை அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவித்து விட்ட நிலையில், தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த அறிவிப்பு சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

click me!