பட்டுப் போன 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் துளிர்விட்டு உயிர்பெற்றது…. நடிகருக்கு குவியும் பாராட்டுக்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 18, 2018, 7:09 PM IST
Highlights

மதுரை அருகே பட்டுப் போன நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  மரம் ஒன்று நடிகர் விவேக்கின் முயற்சியால் பச்சைப் பசேலென இலைகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து நடிகர் விவேக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கிராம மக்கள் அந்த மரத்தை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

மறைந்த அப்துல் கலாம் அறிவுரையின்பேரில் நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். தற்போது அவரது முயற்சியால் பட்டுப்போன 100 ஆண்டுகள் பழமையான மரம் உயிர் பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராம மந்தையில் 100 ஆண்டுகள் பழமையான கடம்பம் மரம் ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு வரை கிராம மக்களுக்கு அருமையான நிழலைத்தந்து கொண்டிருந்த அந்த மரம்  திடீரென்று பட்டு போய்விட்டது.

இதையடுத்த அந்த ஊர் மக்கள் இந்த தகவலை நடிகர் விவேக்கின்  சகோதரி டாக்டர் விஜயலட்சுமி மூலம் அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். மேலும்  மரத்தின் படத்தையும் அனுப்பி வைத்தனர்.

விவேக்கிற்கு  மரக்கன்றுகளை நட தெரியும், மரத்துக்கு வைத்தியம் பார்க்க தெரியாது என்பதால் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு மரத்தின் படத்துடன், இதை துளிர்விட செய்ய முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

விவேக்கின் டுவிட்டர் கணக்கை பின் தொடரும் விவசாய நண்பர் லால் பகதூர் அந்த பதிவை படித்துவிட்டு  உடனடியாக அவர் தனது நண்பர்கள் குழுவுடன் பாப்பாபட்டி புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் அவர்கள் புவியியல் முறைப்படி மாட்டு சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றை குழைத்து மரத்தில் பூசியும், வைக்கோலை திரி, திரியாக வடம் போன்று சுற்றியும் வைத்தியம் பார்த்துள்ளனர்.

 3 வாரம் கழித்து மரம் துளிர்விடவில்லை என்றால், அதற்கு உயிர் இல்லை என்று கூறி இருந்தனர். 3 வாரம் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை.  ஆனால் தற்போது 3 மாதம் கழித்து மரம் துளிர்விட்டுள்ளது. பட்டுப்போன மரத்தில் பச்சை பசேல் என இலைகள் துளிர்விட ஆரம்பித் துள்ளன.

பட்டுப்போன பழமையான மரம் அதிசயமாக மீண்டும் உயிர் பெற்றிருப்பது, பாப்பாபட்டி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கான முயற்சியில் இறங்கிய நடிகர் விவேக், அவரது சகோதரி டாக்டர் விஜயலட்சுமி, லால் பகதூர் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

click me!