
சென்சோடைன் டூத் பேஸ்ட் நிறுவனம் தனது விளம்பரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக தவறான கருத்தை கொண்டிருந்ததையடுத்து,அதை நிறுத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
தவறான கருத்து
பற்களின் பாதுகாப்புக்கு பலவிதமான பற்பசை விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், எல்லாவற்றையும்விட வித்தியாசமான கருத்துக்களைத் தாங்கி சென்சோடைன் விளம்பரம் சேனல்களில் ஒளிபரப்பானது.
“உலகில் உள்ள பல்மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது”, “உலகின் நம்பர் ஒன் சென்சிடிவிட்டி டூத்பேஸ்ட்” என்ற வாசகங்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் வரும் கருத்துக்கள் உண்மைக்கு மாறாக இருந்ததையடுத்து, கடந்த 9ம் தேதியுடன் இந்த விளம்பரத்தை நிறுத்த, சென்சோடைன் டூத்பேஸ்ட் தயாரிக்கும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன்(ஜிஎஸ்கே) நிறுவனத்துக்கு சிசிபிஏ உத்தரவிட்டது.
வழக்கு
சென்சோடைன் விளம்பரத்தைப் பார்த்து தாமாக முன்வந்து சிசிபிஏ வழக்குப்பதிவு செய்தது. மேலும், பல்வேறு சமூக ஊடகங்கள், சேனல்களிலும் சென்சோடைன் விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்தில் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிலும் சென்சோடைன் பற்பசை பல்மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. வெளிநாடுகளில் சென்சோடைன் ரேபிட் ரிலீப், சென்சோடைன் ப்ரஷ் ஜெல் ஆகிய பெயரில் பற்கூச்சத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
பொய்யான வாசகம்
அதுமட்டுமல்லாமல் , “உலகில் உள்ள பல்மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது”, “உலகின் நம்பர் ஒன் சென்சிடிவிட்டி டூத்பேஸ்ட்” “ 60 வினாடிகளில் செயல்படும், மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டது” என்ற வாசகங்கள் வந்தன.
இந்த வாசகங்கள் குறித்து ஜிஎஸ்கே நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி சிசிபிஏ விளக்கம் கேட்டது. ஜிஎஸ்கே நிறுவனம் அளித்த பதிலில், “உலகில் உள்ள பல்மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது”, “உலகின் நம்பர் ஒன் சென்சிடிவிட்டி டூத்பேஸ்ட்” ஆகிய இரு வாசகங்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவர்களிடம் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகளவில் இந்த பேஸ்டை எந்த மருத்துவரும், மருத்துவர்கள் கூட்டமைப்பும் பரிந்துரைத்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. அது குறித்து வெளிநாடுகளில் ஜிஎஸ்கே நிறுவனம் எந்தவிதமான ஆய்வும் நடத்தவில்லை.
ஆதாரம் இல்லை
60 வினாடிகளில் கிளினிக்கலால நிரூபிக்கப்பட்டது என்ற வாசகத்தின் அடிப்படையை வைத்து, சிசிபிஏ, இந்திய மருந்துதரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பி விளக்கம் கேட்டது. ஜிஎஸ்கே நிறுவனம் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள இந்த வாசகங்கள் உண்மையில் நிரூபிக்கப்பட்டதா என்று சிசிபிஏ கோரியது.
இதையடுத்து, ஜிஎஸ்கே நிறுவனம், 60 வினாடிகளில் செயல்படும், கிளினிக்களாக நிரூபிக்கப்பட்டது என்ற வாசகம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப துணை மருந்துக் கட்டுப்பாட்டாளருக்கும், மருந்து அங்கீகாரப்பிரிவுக்கும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக விசாரணையும் நடந்துவருகிறது.
அபராதம்
விசாரணையின் முடிவில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜிஎஸ்கே நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
கொரோனா காலத்தில் நுகர்வோர்கள் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட்ட 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அந்த நிறுவனங்கள் விளம்பரங்களை திரும்பப் பெற்றுவிட்டன, 3 நிறுவனங்கள் விளம்பரங்களை திருத்திவிட்டன.
ஆனால் நுகர்வோர்களிடம் தவறான கருத்துக்களைத் திணித்து, அவர்களை தவறாக வழிநடத்திய கிளாஸ்க்கோ ஸ்மித்ஸ்ளைன் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதமும், அந்த விளம்பரங்களை வெளியிடவும் தடைவிதித்து சிசிபிஏ உத்தரவிட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.