
தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் மனு விசாரணை மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இருவரும் 3-வது முறையாக இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தநிலையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோலொகேஷன் ஊழல்
என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
அபராதம்
இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.
ஜாமீன் மனு தள்ளுபடி
கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.ஏற்கெனவே சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் 2 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனந்த் சுப்பிரமணியன் இருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்நிலையில் 3-வது முறையாக இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி அகர்வால் முன் கடந்தமாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சித்ரா, ஆனந்த் ஆகியோரின் ஜாமீன் மனு விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இருவரின் ஜாமீன் மனு இன்று நீதிபதி அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவது தொடர்பான தனது உத்தரவை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.