
கடந்த சில ஆண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறை வேகமாக மாறியுள்ளது. திருமண விழாக்கள், ஆடம்பர போன்கள், கார்கள், பிராண்ட் ஆடைகள், ரெஸ்டாரன்ட்கள் போன்றவற்றில் செலவுகள் அதிகரித்து விட்டன. இவற்றை பலர் “அத்தியாவசியம்” எனக் கருதத் தொடங்கியதால், கடன் மற்றும் EMI மீதான நம்பிக்கை பெரிதளவில் உயர்ந்து வருகிறது.
நிதி நிபுணர்களின் எச்சரிக்கை
இந்த மாற்றத்தைப் பற்றி பட்டய கணக்காளர் நிதின் கௌஷிக் கவலை தெரிவித்துள்ளார். “நாட்டின் நிதி ஆரோக்கியத்தைக் குறைக்கக்கூடிய அபாயம் இது,” என அவர் எச்சரிக்கிறார். நடுத்தர வர்க்கம் தேவையில்லாமலும், வெறும் ‘அதிகப்படியான வாழ்க்கையை’ காட்டிக் கொள்ளவே கடன் எடுப்பதாக அவர் கூறுகிறார்.
தரவுகள் சொல்லும் உண்மை
இதுபற்றி நிதின் கௌஷிக் கூறியதாவது, இந்தியாவில் விற்கப்படும் iPhone-களில் 70%, கார்கள் 80% வரை EMI-யில் வாங்கப்படுகின்றன. இதனால், சேமிப்பதை விட கண்ணுக்கு பட்ட ஆடம்பரத்தை விரும்பும் மனநிலை அதிகரித்து இருப்பது தெளிவாகிறது. ஊதியம் உயரவில்லை, ஆனால் வாழ்க்கை முறை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பலர் கடன் வலையில் சிக்கியுள்ளனர்.
ஒவ்வொரு இரண்டாவது இந்தியருக்கும் கடன்
இன்றைய சூழலில் ஒவ்வொரு 2 இந்தியர்களிலும் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு வகையான கடன் அதாவது தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வாகனக் கடன் ஆகியவற்றில் இருப்பதாக கௌஷிக் கூறுகிறார். இதனால், மாதாந்திர வருமானத்தின் பெரும்பகுதி EMI-களில் செல்கிறது.
ஆச்சர்யப்பட வைக்கும் கடன் புள்ளிவிவரங்கள்
பிசினஸ் டுடே தகவல்படி, 2023 முதல் 2025 மே வரை இந்தியர்கள் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் தனிநபர் கடன் எடுத்துள்ளனர். அதிக கடனை எடுத்தவர்கள் இளம் பணியாளர்கள். அதோடு, இந்தியாவில் டீமேட் கணக்குகள் 19 கோடி மார்க்கை கடந்துள்ளன. அதாவது முதலீட்டாளர்களுக்கு அதிக வருவாய் ஆனால் அதே சமயம் அபாயமும் அதிகம்.
ஆபத்தான முதலீட்டு நடத்தை
சிலர் கடன் வாங்கிய பணத்தை பங்குச் சந்தையில் போடுகின்றனர். ஒரு முதலீட்டாளர் கடன் தொகையை சிறு–மூலதன பங்குகளில் வைத்து 40% லாபம் ஈட்டிய உதாரணம் உள்ளது. இது ஒருபுறம் வெற்றி போல தோன்றினாலும், மிகப்பெரிய அபாயம் என்று கௌஷிக் கூறுகிறார். சந்தை சரிந்தால் கடும் நஷ்டமும் கடன் சுமையும் வரும்.
பணக்காரர்கள் vs நடுத்தர வர்க்கத்தின் கடன் நோக்கம்
கௌஷிக்கின் கூற்றுப்படி, பணக்காரர்கள் தொழில் வளர்ச்சி / சொத்து உருவாக்கக்காக கடன் எடுப்பார்கள். ஆனால் நடுத்தர வர்க்கம் பெரும்பாலும் பிராண்டுகள், ஆடம்பரம், சமூகத்தில் காட்டிக்கொள்ள என்பதற்காக கடன் எடுப்பதை அவர் விமர்சிக்கிறார். இது பொருளாதாரத்தில் ஆபத்தான சுழற்சியை உருவாக்கும்.
சரியான கடன் எப்போது?
கல்வி, வீடு, வணிகம், திறன் மேம்பாடு போன்ற முன்னேற்றத்துக்கான முதலீடுகள் நன்மை தரும். ஆனால் தேவையில்லாத ஆடம்பரத்துக்கு கடன் எடுப்பது எதிர்கால நிதி நிலையை ஆபத்தில் ஆழ்த்தும். “சேமிப்பு + புத்திசாலித்தனமான முதலீடு + தேவைக்கேற்ற கடன்” இதுவே சீரான நிதி வாழ்விற்கு சரியான சமநிலை என்று அறிவுறுத்துகிறார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.