
புத்தாண்டு தொடக்கம் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனிமையாக அமையவில்லை. ஜனவரி 1 அன்று பங்குச்சந்தை திறந்த உடனே, சிகரெட்டுகள் மீதான புதிய கலால் வரியை மத்திய அரசு அறிவித்தது. இதன் எதிரொலியாக, ITC மற்றும் Godfrey Phillips India ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த புதிய கலால் வரி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு அரசின் இந்த முடிவு தெளிவான எச்சரிக்கையாக இருந்தது. வரி சுமை அதிகரிப்பதால், சிகரெட் விலை உயரும்; அதனால் விற்பனையும் லாபமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் பங்குச்சந்தையில் உடனடியாக பிரதிபலித்தது. புதன்கிழமை இரவு வெளியான நிதி அமைச்சக அறிவிப்பின்படி, இனி சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து 1,000 ஸ்டிக்குகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கலால் வரி விதிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள 40% ஜிஎஸ்டிக்கு மேலாகும்.
இந்த அறிவிப்பால் அதிகமாக பாதிக்கப்பட்டது ஐடிசி. Bombay Stock Exchange-இல், ஐடிசி பங்கு கிட்டத்தட்ட 6% சரிந்து, ரூ.379 என்ற 52 வார குறைந்தபட்ச நிலையைத் தொட்டது. ஒரே நாளில் 4 கோடிக்கும் மேற்பட்ட பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த பங்கு சுமார் 17% மதிப்பை இழந்துள்ளது என்பது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மற்றொரு புறம், காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா பங்குகள் இன்று கடும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் சுமார் 10% சரிவு இந்த பங்கு ரூ.2,483 எந்த அளவுக்கு சரிந்தது. கடந்த ஆண்டு நல்ல வருமானம் கொடுத்த இந்த பங்கு, அரசின் கொள்கை முடிவால் திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி, சில்லறை விலையில் வரி பங்கை அதிகரிக்க அரசு முயற்சிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். அதன் உடனடி தாக்கம் தற்போது சிகரெட் பங்குகளில் தெளிவாக தெரிகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.