பன்றி - மீன் வளர்ப்பு - ஒருங்கிணைந்த பண்ணையில் மட்டுமே இது சாத்தியம்...

First Published Mar 20, 2018, 1:32 PM IST
Highlights
Pig - Fisheries - This is only possible on the integrated farm ...


பன்றி - மீன் வளர்ப்பு

சீனா, தைவான், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் இம்முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. பன்றிகளுக்கு உணவாக சமையல் கழிவுகள் நீர்த்தாவரங்கள், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை கொடுக்கலாம். 

30 -35 பன்றிகளின் கழிவு 1 டன் அம்மோனியம் சல்பேட்டிற்குச் சமம். அயல்நாட்டு இனங்களான வெள்ளை யார்க்ஷயர், மேன்டிரேஸ், ஹேம்ப்ஸயர் போன்றவற்றிற்கு 3 - 4மீ2 அளவு இடம் தேவைப்படும். 

சோளம், நிலக்கடலை, கோதுமை - 2 மி, மீன்துகள், தாதுக்கலவை போன்றவை அடர்தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன.

இட வசதிக்கேற்ப ஒரே குளமாகவோ அல்லது இரண்டு குளங்களாகவோ அமைக்கலாம். பன்றிக்கழிவிலிருந்து வீட்டுத் தேவைக்குத் தேவையான சான எரிவாயுவைத் தயாரித்துக் கொள்ள முடியும். சிறுநீரைக் குளத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு சிறிய கால்வாய் போன்று அமைக்க வேண்டும். 

சானத்தை ஆக்ஸிஜனேற்ற தொட்டிக்குள் செலுத்தி சிறிது மட்க வைத்த பின்பே குளத்தில் போட வேண்டும். அதன் சூடு தனிந்து மட்கும் வரை சில நாட்கள் குவித்து வைத்துப் பின்பு நீரில் கரைத்து குளத்தினுள் கலக்கச் செய்யலாம்.

பன்றிச் சானத்தில் 70 சதம் மீன்களால் எளிதில் எடுத்துக் கொள்ள இயலும். மீதமுள்ள 30 சதமும் சாதாரண கெண்டை, திலேப்பிக் கெண்டைபோன்ற மீன்கள் உண்டுவிடும். ஒரு ஹெக்டர் பரப்பளவு கொண்ட மீன் குளத்திற்கு 60 -100 பன்றிகள் உணவளிக்க போதுமானது. மீன் வளர்ப்பிற்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 1 டன் உரம் தேவைப்படுகிறது.

புல் கெண்டை, சாதாரண கெண்டை, வெள்ளி கெண்டை (1:1:2) போன்ற மீன் இனங்கள் பன்றி - மீன் ஒருங்கிணைந்த வளர்ப்புக்கு ஏற்றவை.

பன்றிகள் 6 மாதத்தில் 60 -70 கிலோ எடையுடன் முதிர்ச்சி பெற்றுவிடும். ஒவ்வொரு ஈற்றிலும் 6 - 12 குட்டிகளை ஈனும். 6-8 மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடும். மீன்கள் 1 வருடத்தில் வளர்ந்து விற்பனைக்குத் தயாராகிவிடும். 

நன்கு வளர்ந்துள்ள பெரிய அளவு மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய வேண்டும். 12 மாதங்களுக்குப் பின் அனைத்து மீன்களையும் அறுவடை செய்து விற்றுவிடலாம்.

click me!