அடுத்தாண்டு முதல் ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டி டெல்லியில் போராட்டம்…
ஈரோடு
அடுத்தாண்டு முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஈரோடு சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவையர்கள் சங்க அரங்கில் நடைப்பெற்ற கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக இச்சங்கத்தின் மாநிலச் செயலர் சி.கே.நரசிம்மன் பங்கேற்றார்.
அப்போது அதில் அவர் பேசியது: “1.1.2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படி மாதம் ரூ.2000, அடிப்படை ஓய்வூதியம் ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.
ஓய்வூதியப் பலன் இழப்பை 10 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், தனி தொழிற்சங்கங்கள் டெல்லியில் நவம்பர் 9, 10, 11-ஆம் தேதிகளில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த தொடர் தர்னாவில் ஓய்வூதியர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் சங்கங்கள் சார்பில் நவம்பர் 10-ஆம் தேதி போராட்டம் நடைபெறும்” என்று அவர் பேசினார்.
இக்கருத்தரங்கில், சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் செ.நடேசன், மாநில துணைச் செயலர் என்.குப்புசாமி, மாநில அமைப்புச் செயலர் என்.சின்னையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.