தமிழர் பண்பாட்டில் வீட்டு வாசல்படிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்படுகிறது? எப்படி தெரியுமா?
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவை. மகிழ்ச்சி பொங்கும் சூழ்நிலையில் ஆரவாரம் செய்வதும், துன்பமான தருணங்களில் துவண்டு விடுவதும் அனைவருக்கும் உள்ள பொதுவான மனநிலை.
ஆனால் அதையும் தாண்டி நமது வாழ்க்கையில் வேண்டிய உறவுகள் எவை? வேண்டாத உறவுகள் எவை? என்று உறவுகளின் மதிப்பீடுகளை நிர்ணயம் செய்யும் இடமாகவும் வாயில்படிகள் அமைந்திருக்கின்றன.
வீடு என்பது குறிப்பிட்ட காலியிடத்தில் அமைக்கப்படும் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்படுகிறது. நான்கு புறமும் பூமிக்கடியில் அமைக்கப்படும் அஸ்திவாரம் வீட்டை தனிப்பட்ட ஒரு இடத்திலிருந்து பிரித்து வேறொரு கட்டமைப்பாக எடுத்து காட்டுகிறது.
கட்டுமான அமைப்புகள் எதுவாக இருந்தாலும் அஸ்திவாரம் என்பது அடிப்படையான விஷயம். மேலும் கட்டிட அமைப்புக்குள் சென்றுவருவதற்கு நுழைவாயிலும் முக்கியமான அம்சமாகும்.
இவ்விரு அமைப்புகளும் இல்லாமல் எந்த ஒரு கட்டிடத்தையும் வடிவமைப்பது சாத்தியமில்லை. இவற்றோடு மூன்றாவதாக முக்கியத்துவம் பெற்ற விஷயமாக வீட்டின் வாயில் படிகள் இருக்கின்றன. வீட்டையும் தெருவையும் இணைக்கக்கூடிய பொது இடமாக அவை உள்ளன.
தமிழர் பண்பாட்டில் வாசல்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் பன்முகத்தன்மை பெற்றதாகவும், உள்ளர்த்தங்கள் உடையதாகவும் இருக்கிறது.
‘படியிலேயே நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்களே, உள்ளே வாருங்கள்..’ என்று உறவுகள் மதிக்கப்படுவதையும், “உன் வீட்டு வாசல் படியை இனி நான் மிதிக்கவே மாட்டேன்’ என்று உணர்ச்சி வயப்பட்டு சொல்லப்படுவதையும், ‘வாசல்படியோடு பேசி அனுப்பி விட்டேன்’ என்று வேண்டாத உறவுகள் மறுக்கப்படுவதையும் நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எவ்வகை கட்டிட வடிவமைப்பாக இருந்தாலும் அஸ்திவாரம், நுழைவாயில், வாயிற்படிகள் ஆகியவை இல்லாமல் அவை முழுமை பெற இயலாது. நவீன தொழில் நுட்பங்களின் உதவியால் அஸ்திவாரங்கள் இன்று ‘பில்லர்’களாகவும், ‘காலம்’களாகவும் மாறிவிட்டன.
ஆனால் வீட்டின் வாயிற்படிகள் கட்டமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. உறவுகளுக்கு வரவேற்பு அல்லது மறுப்பு என்ற நிலைப்பாட்டை தெரிவிக்கும் இடமாக அன்று முதல் இன்றுவரை வீட்டின் வாயில்படிகள் விளங்கி வருகின்றன.
குடும்ப உறவுகளில் வேண்டுபவர், வேண்டாதவர் என்ற நிர்ணயம் செய்யப்படும் முதல் இடமாகவும் வாயில்படிகள் இருப்பதை இந்த பழமொழி எடுத்து சொல்கிறது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.