எங்க ஸ்கூல இப்படி பண்ணி வச்சிருக்கீங்க… அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கிய பள்ளி சிறுமி..!
தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு பள்ளியில் கழிவுகளை சுத்தம் செய்யாமல் விட்டு சென்ற அரசு அதிகாரிகளை பள்ளி சிறுமி ஒருவர் வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பள்ளியில் கழிவுகளை கொட்டி சென்றுவிட்டீர்கள் இது சரியா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய யுகேஜி மாணவி , “ எங்களோட கிளாஸ் ரூம என்ன பண்ணி வச்சிருக்கீங்க ? அரசு அதிகாரிகள் என்று சொல்றாங்க. ஆனால் சாப்பிட்ட உணவு குப்பைகளை கூட அகற்றாமல் பள்ளி வளாகத்திலேயே இப்படி அசுத்தமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.
எங்கள் பள்ளியை நாங்களே தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். வெளியில் இருந்து வருபவர்களும் அதே போன்று செய்ய வேண்டும் என்று தெரியாதா?” என்று மழலை மொழியில் அரசு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டுள்ளார் பள்ளி மாணவி. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.