ரூ. 7 கோடி முறைகேடா...? ஆதாரம் இருக்கா? - டி.ஆருக்கு சவால் விடும் விஷால்...!
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் பதில் கூறுவோம் எனவும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது.
ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு சில பிரச்சனைகள் வெடித்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இன்றைய தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், கூட்டம் தாமதமாகத்தான் துவங்கியது என தெரிவித்தார்.
மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது எனவும், இப்போது வரை கணக்குக் கேட்டதற்கு விஷால் முறையாக பதில் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பியதற்கும் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார் எனவும் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய விஷால், காழ்ப்புணர்ச்சியால் நல்ல விஷயங்களுக்கு சிலர் தடையாக உள்ளனர் எனவும் குறிப்பிட்ட சிலர் வேண்டும் என்றே பொதுக்குழுவில் பிரச்சனையை எழுப்பினர் எனவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் பதில் கூறுவோம் எனவும் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் ரத்தாகாது எனவும் 149 படங்களுக்கு அரசு மானியம் அறிவித்துள்ளது. அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சங்க சட்டவிதியில் இல்லை என்றும் விஷால் தெளிவு படுத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் எனவும் போட்டியிட வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை எனவும் விஷால் சாடினார்.