பழிவாங்கத் தொடங்கி விட்டதா பாஜக அரசு !! விஷாலுக்கு வருமான வரித்துறை சம்மன் !!!
வரி பிடித்தம் செய்ததில் 51 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என நடிகர் விஷால் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து வரும் 27 ஆம் தேதி நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மெர்சல் திரைப்படத்தை பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, இணையத்தில் பார்த்ததாக கூறியதற்கு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பாக வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்களின் கோரிக்கையை ஏற்கக் கூடாது எனவும் விஷால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஷாலின் படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த நடிகர் விஷால், தான் நேர்மையாக வரி செலுத்துவதால் தனக்கு அச்சமில்லை என்றும் என்னை பழிவாங்க நினைத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வரி பிடித்தம் செய்ததில் 51 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு செலுத்தவில்லை என நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து வரும் 27 ஆம் தேதி நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மெர்சல் திரைப்படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நடிகர் விஷால் அப்படத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் அவரை பழி வாங்கும் விதமாக மத்திய பாஜக அரசு, வருமான வரித் துறையை ஏவிவிட்டுள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.