இலங்கை வடக்கு மாநில முதல்வராக விக்‌னேஸ்வரனே நீடிப்பார் - தமிழ் தேசிய கூட்டணி தலைவர் பேட்டி...

First Published Jun 17, 2017, 3:55 PM IST
Highlights
Vigneshwaran will be the Chief Minister of the North of Sri Lanka


நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள இலங்கை வடக்கு மாநில முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், அவர் தொடர்ந்து முதல்வராகவே நீடிப்பார், நீக்கப்படமாட்டார் என்று தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஊழல் புகார்

இலங்கை வடக்கு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் சி.வி. விக்னேஸ்வரன். இவரின் அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் பி. ஐங்கரநேசன், கல்வித்துறை அமைச்சர் டி.குருகுலராஜா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஊழல் புகார் கூறப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இதையடுத்து, இதை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு கடந்த வாரம் அறிக்கை அளித்தது. அதில், இரு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர்களை பதவி விலகக் கோரி, விசாரணை நடத்த முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதையடுத்து,  38 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் வடக்கு மாநில அரசில் 22 உறுப்பினர்கள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டி அதற்கான மனுவை கவர்னர் ரெஜினால்ட் கூரையிடம் கடந்த 15-ந்தேதி அளித்தனர்.

கடையடைப்பு

இதனால் யாழ்பாணம் நகரில் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு, பஸ்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கருத்து வேறுபாடு

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து ரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணி கட்சியுடன், விக்னேஷ்வரனுக்கு லேசான உரசல் இருந்து வந்தது.  குறிப்பாக இலங்கை தமிழர்களை மீழ்குடியேற்றும் செய்யும் அரசின் திட்டங்களில் உள்ள குறைபாடுகள்குறித்து விக்னேஸ்வரனுக்கும், தமிழ்தேசிய கூட்டணிக்கும் இடையே உரசல் இருந்தது.

இதற்கிடையே திடீரென முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கவர்னரிடம் கொடுத்துள்ளனர்.

நீக்கப்படமாட்டார்

இது குறித்து தமிழ்தேசிய கூட்டணியின் மூத்த தலைவர் சிவாஜிலிங்கம் கூறுகையில், “ வடக்கு மாநில முதல்வர் விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார். தமிழக்தேசியக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இருக்கின்றன. கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவரே முதல்வராக நீடிப்பார். இது தொடர்பாக கவர்னர் கூரே என்னிடம் பேசுகையில், விக்னேஸ்வரன் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார்’’ எனத் தெரிவித்தார்.

சமூகமாக முடியும்

இதற்கிடையே தமிழ் தேசியக் கூட்டணிக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் சுமூகமாக பேசித் தீர்க்கப்படும் என தமிழ்தேசிய கூட்டணி வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!