
ஓமன் நாட்டில் பெரும் அருவி கொட்டுவதுபோல் திடீரென 3 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து தள்ளியது. இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரபிக்கடலில் உருவான மெகுனு புயல், தீவிரமடைந்து ஏமன் நாட்டின் சொகோட்ரா தீவை தாக்கியது. அப்போது கடும் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதைத் தொடர்ந்து ஓமன் நாட்டின் சில பகுதிகளையும் தாக்கிவிட்டு கரையைக் கடந்தது. இதனால் ஓமனின் 3-வது பெரிய நகரமான சலாலாவில் மணிக்கு சுமார் 170 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன் நாட்டிலும் இந்த மழை பெய்துள்ளது. இந்த கன மழை காரணமாக மொத்தம் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.45 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
2 லட்சம் வீடுகளை இந்த வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓமனில் உள்ள சலாலா நகரில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா பகுதிகளும் இதனால் மூழ்கி இருக்கிறது.
இதனிடையே ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. 3 வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக நேற்று ஒரே நாளில் பெய்துள்ளது. கிளவுட் பர்ஸ்ட் என்று அழைக்கும் அளவுக்கு பெய்த கனமழையால் ஓமன் நாடே திணறி வருகிறது,
ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். மின் இணைப்பு, தொலைத் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணி செய்ய முடியாமல் அரசாங்கம் கஷ்டப்பட்டு வருகிறது. இன்னும் அங்கு சிறிய அளவில் மழை பெய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலாலாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 278.2 மிமீ மழை பெய்துள்ளது. இது இந்த நகரின் 5 வருட சராசரி மழையாகும் புயல் மற்றும் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாயந்தன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.