இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அநீதி...உலக தலைவர்கள் மத்தியில் முழங்கிய பிரதமர் மோடி..!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 10:38 PM IST
Highlights

இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் இணைப்பு திட்டங்கள் மக்களுக்கு பலன்களை மட்டும் அளிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில்  மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் சிஓபி26 என்ற பெயரில் காலநிலை மாற்றம் பிரச்னை தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட 120 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி தலைவர்கள் மத்தியில் இன்று பேசினார். “காலநிலை மாற்றம் குறித்து பள்ளிகள் அளவில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். உலகளாவில்ய வளர்ச்சி கொள்கையில் மற்றும் திட்டங்களில் முக்கிய பங்காக  காலநிலை மாற்றத்தை அனைத்து தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் இணைப்பு திட்டங்கள் மக்களுக்கு பலன்களை மட்டும் அளிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளது.

காலநிலை மாற்றத்தால், இந்தியாவில்  மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவைப் போலவே, பெரும்பாலான வளரும் நாடுகளிலும் விவசாயத் துறைக்கு காலநிலை பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இது வளரும் நாடுகளுக்கான அநீதி ஆகும். இதேபோல கால நிலை மாற்றத்தால் குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கால நிலை மாற்றத்தில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக கிளாஸ்கோவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வர்கள் பச்சை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் உள்ளிட்ட திட்டங்களில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்கள். மேலும் இரு தரப்பு பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுடனான உறவுகள் குறித்தும் தங்களுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

click me!