கொரோனாவிற்கு அடுத்து வருகிறது மிகப்பெரிய ஆபத்து.... இந்தியர்களை எச்சரிக்கும் ஐ.நா...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 8, 2020, 4:52 PM IST
Highlights

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 40 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்க உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸால் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், கனடா உள்ளிட்ட நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க அரசுகளின் கையில் இப்போதைக்கு உள்ள ஒரே துருப்பு சீட்டு, ஊரடங்கு மட்டுமே. 

ஏற்கனவே மக்கள் பசி, பட்டினியால் வாடி வரும் இந்த சூழ்நிலையில் ஐ.நா.வின் உலக தொழிலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இந்தியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இரண்டாம் உலகப்போரை விட கொடுமையானதாக கருதப்படும் கொரோனா வைரஸால் அடுத்து நிகழ உள்ள பிரச்சனைகள் நம்மை மலைக்க வைக்கிறது.

ஆம், ஏற்கனவே கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 40 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்க உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்தியாவில் அமைப்பு சாரா பணிபுரியும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர், அதாவது 40 கோடி பேர் வறுமை எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்க உள்ளனர்.  இவர்கள் அனைவரும் தற்போது ஊரடங்கு காரணமாக நடந்தே சொந்த  ஊருக்கு திரும்பிய தினக்கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். ஒருவேலை சாப்பாட்டிற்காக பல கிலோ மீட்டர்கள் நடந்தே சொந்த ஊர் சென்றடைந்த மண்ணின் மைந்தர்கள் தான் கொரோனாவால் ஏற்பட உள்ள அடுத்த சரிவையும் சந்திக்க உள்ளனர் என்ற கசப்பான உண்மை தெளிவாகியுள்ளது. 


இந்தியாவில் மட்டுமின்றி பிரேசில், நைஜீரியா போன்ற நாடுகளில் முறைசாரா பணிகளை செய்து வரும் 2 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையால் பாதிக்கப்பட உள்ளனர். உணவு, தங்குமிடம், சில்லறை வர்த்தகம், உற்பத்தி துறை ஆகியன வேலையில்லா துறைகளாக மாறியுள்ளன. 

இந்த நிலையை மாற்ற வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரித்தல், பணி பாதுகாப்பு, அரசாங்கம், தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு இடையேயான கருத்துக்களை பெறுவது ஆகியன முக்கியமானதாக கருதப்படுகிறது. 

click me!