
சவுதி அரேபியாவில் வசித்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடும்ப வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு கொள்கை வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
சவுதி அரேபியாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். தற்போது சவுதி அரேபிய அரசு, புதிய வரி விதிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, சவுதியில் குடும்பத்தினருடன் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள், தங்கள் குடும்பத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். சவுதியைப் பொறுத்தவரை பிற நாட்டவரைக் காட்டிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளனர். சுமார் 41 லட்சம் இந்தியர்கள் சவுதியில் வசித்து வருகின்றன.
சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் மாத வருமானம் 5,000 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.86,000) வாங்கினால் மட்டுமே குடும்பத்தினருடன் வசிக்க அனுமதி வழங்கப்படும். இல்லை எனில் குடும்பத்துடன் சவுதியில் குடியேற முடியாது.
இந்த நிலையில், சவுதி அரசின் புதிய வரி விதிப்பு கொள்கை முடிவின்படி, சவுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடும்பத்தில் ஒரு நபருக்கு மாதம் 100 ரியால் (இந்திய மதிப்பில் ரூ.1700) வரியாக வசூலிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் 2020-க்குள் ஒரு நபருக்கான மாத வரி 400 ரியாலாக உயரும் என்றும் அந்நாடடு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரசின் இந்த புதிய வரி விதிப்பு காரணமாக அங்கு வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.