ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் அல்லாடும் ஐ.நா சபை...

By sathish kFirst Published Oct 10, 2019, 5:35 PM IST
Highlights

பணப் புழக்கம் இல்லை. பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம் அப்படி  இப்படி பிரச்சினைகள் எல்லாம் நம்மவூரு சாதாரண அய்யாசாமிக்கு மட்டும் அல்ல, ஐ.நா சபைக்கும் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பணப் புழக்கம் இல்லை. பொருளாதார நெருக்கடி, தொழில் முடக்கம் அப்படி  இப்படி பிரச்சினைகள் எல்லாம் நம்மவூரு சாதாரண அய்யாசாமிக்கு மட்டும் அல்ல, ஐ.நா சபைக்கும் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா சபைக்கு ஆண்டுதோறும் உறுப்பு நாடுகள் செலுத்த வேண்டிய தொகையை, முறையாக செலுத்தாததால், இத்தகைய நெருக்கடி வந்துள்ளது. அதன் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் அல்லாடுகிறது ஐ.நா சபை.

உலக நாடுகள் பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஐ.நா சபைக்கே இந்த, பிரச்சினை என்றால், மற்றவர்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், நாடுகளுக்கு இடையே சண்டை மூளுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும், உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவவும், 1945-ம் ஆண்டு முதல் ஐ.நா தொண்டாற்றி வருகிறது.

உறுப்பினராக உள்ள நாடுகள் அளிக்கும் நிதியில்தான் ஐ.நா சபை செயல்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாக, பல உறுப்பு நாடுகள், முறையாக பணம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, அதன் ஊழியர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாமல் ஐ.நா தடுமாறுகிறது.

ஐ.நா சபையின் ஆண்டு பட்ஜெட் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய். இந்த தொகை சரியாக வசூல் ஆகாத காரணத்தால்தான் ஐ.நாவுக்கு இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், ஈரான், உள்ளிட்ட 64 நாடுகள் அதிக அளவில் பாக்கி வைத்துள்ளன. இஸ்ரேல், சவூதி அரேபியா, தென் கொரியா போன்ற பணக்கார நாடுகளும், தனது நிதிப் பங்கை ஐ.நாவுக்கு செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன.

ஆனால், உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் சிறு சிறு நாடுகள் அனைத்தும் தங்களது நிதியை ஒழுங்காக செலுத்தி வருகின்றன. எனவே, ஐ.நாவின் நிதி நெருக்கடியை சமாளிக்க உறுப்பு நாடுகள், தங்களது நிதிப் பங்களிப்பை உடனடியாக செலுத்துமாறு, அதன் பொதுச் செயலர் ஆன்டானியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!