அடுத்த ஆறு மாதங்களில் கொரோனாவைவிட மோசமான கொடுமை..!! 12 லட்சம் குழந்தைகளுக்கு நேரப்போகும் ஆபத்து..!!

By Ezhilarasan BabuFirst Published May 14, 2020, 5:53 PM IST
Highlights

அடுத்த ஆறு மாத காலத்தில் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தைவிட கூடுதலாக உயிர் இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது , குறிப்பாக இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது . 
 

அடுத்த ஆறு மாதங்களில்  உலகிலுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளில் சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என  அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது .  அதாவது அடுத்த ஆறு மாதத்திற்குள் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளின் மூலம் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது எனவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  சுமார் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன .  இந்த  வைரசால் இதுவரை 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது .  அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது விமானப் போக்குவரத்து உள்ளிட்டவைகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன இதனால் பல்வேறு ஏழை எளிய நாடுகளில் பொதுச் சுகாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன .  இன்னும் பல நாடுகளில் போதிய அளவில் உயிர்காக்கும்  மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன . இந்நிலையில் கொரோனா எதிரோலியாக ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகள்   குறித்து ஆய்வு நடத்தி உள்ள அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும்  தேவையான  மருத்துவ சேவைகள்  தடைபட்டுள்ளது என தெரிவிக்கின்றனர் . ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடுவது கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தடைபட்டுள்ளது ,  அவர்களுக்கு முறையாக ஊட்டச்சத்து மாத்திரைகளும் வழங்கப்படவில்லை ,  குறிப்பாக ஆசிய நாடுகளில் போலியோ  சொட்டு மருந்து உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளன . 

உலக அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என சுமார்  80 சதவீதம் பேர்  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களின் எண்ணம் சிந்தனை அனைத்தும் கொரோனா தடுப்பு பணியிலேயே உள்ளது .  மற்ற பணிகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போதைய சூழல் குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது .  இதன் காரணமாக குழந்தைகள் கர்ப்பிணிகள் உடல் நலம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது . அதே போல் தெற்காசியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வழக்கமான சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன .  இதன் காரணமாக குழந்தை பிறப்பு  ,  சிசு பாதுகாப்பு ,  நோய்த்தடுப்பு  , குடும்பகட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளது அதேபோல் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் , இதனால்  குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் அவர்கள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது .  அடுத்த ஆறு மாத காலத்தில் 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்தைவிட கூடுதலாக உயிர் இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது ,  குறிப்பாக இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது . 

பிரேசில் பாகிஸ்தான் நைஜீரியா மாலி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பேரிழப்பாக இருக்குமென்றும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கவலை தெரிவித்துள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள  உலக சுகாதாரஅமைப்பின் தலைமை சுகாதார அதிகாரி ஸ்டீபன் பீட்டர்சன் ஏற்கனவே இதற்கான பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டு இருப்பது இதற்கு ஒரு பெரிய காரணமாக இருக்கலாம் ,  அல்லது அவர்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதில் ஏற்பட்ட தேக்கம் காரணமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ள அவர் எப்படி இருந்தாலும் இந்தனை லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு என்பது பெருஞ்சோகம் என தெரிவித்துள்ளார்.  

 

click me!