7 நிமிடத்தில் நடந்த கொள்ளை! பாரிஸ் லூவர் மியூசியத்தில் மாயமான நெப்போலியன் கால நகைகள்!

Published : Oct 20, 2025, 05:53 PM IST
Theft at the Louvre Museum in Paris

சுருக்கம்

பாரிஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில், நெப்போலியன் காலத்து விலையில்லா நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெறும் 7 நிமிடங்களில் நடந்த இந்தத் துணிகரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் மூடப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற மற்றும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum), நெப்போலியன் காலத்தைச் சேர்ந்த விலையில்லா நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அருங்காட்சியகம் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

7 நிமிடத்தில் நடந்த கொள்ளை:

இந்தக் கொள்ளைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) காலை சுமார் 9:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் இது "ஒரு பெரிய கொள்ளை" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சு நாளிதழ் 'லெ பாரிசியன்' வெளியிட்டுள்ள தகவலின்படி, கொள்ளையர்கள், அருங்காட்சியகத்தின் செய்ன் (Seine) ஆற்றை நோக்கியுள்ள கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதி வழியாக நுழைந்துள்ளனர். அவர்கள் ஒரு ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி, பிரெஞ்சு அரச நகை சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அப்பல்லோ கேலரியை (Apollo Gallery) அடைந்துள்ளனர்.

அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை ஒரு "டிஸ்க் கட்டர்" மூலம் வெட்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் ஒட்டுமொத்த நடவடிக்கையையும் வெறும் 7 நிமிடங்களில் முடித்துள்ளனர் என்று அமைச்சர் நுனேஸ் தெரிவித்தார். இது சம்பவத்திற்கு முன்பே நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கொள்ளை முயற்சி என்பதைக் காட்டுகிறது.

திருடுபோன பொருட்கள்

நெப்போலியன் மற்றும் பேரரசிக்குச் சொந்தமான நகை சேகரிப்பிலிருந்து 9 விலையில்லா நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக 'லெ பாரிசியன்' தெரிவித்துள்ளது. இருப்பினும், கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது, திருடப்பட்ட ஒரு நகை அருங்காட்சியகத்தின் வெளியே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அருங்காட்சியகம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், "விதிவிலக்கான காரணங்கள்" காரணமாக அருங்காட்சியகம் திடீரென மூடப்பட்டதாக அறிவித்துள்ளது.

கொள்ளையை உறுதிசெய்த அமைச்சர்

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரச்சிடா தாட்டி முதன்முதலில் இந்தக் கொள்ளையை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருடன் தான் சம்பவ இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாரிஸ் அரசு வழக்குரைஞர் அலுவலகம் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், திருடுபோன பொருட்களின் மதிப்பையும், ஏற்பட்ட சேதத்தையும் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொள்ளை நடந்ததைத் தொடர்ந்து, லூவர் அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததையும், பொதுமக்கள் காத்திருந்ததையும் காட்சிகளின் மூலம் அறிய முடிந்தது.

லூவர் அருங்காட்சியகம்:

தினமும் சுமார் 30,000 பார்வையாளர்களை ஈர்க்கும் லூவர் அருங்காட்சியகம், உலகின் அதிகம் பேர் வந்துசெல்லும் அருங்காட்சியகமாகும். மோனலிசா ஓவியம், வீனஸ் டி மிலோ போன்ற 33,000-க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சின்னங்கள், சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக, 1911-ஆம் ஆண்டு மோனலிசா ஓவியம் திருடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி