மரண பீதியை வரவழைக்கும் கஃபே... தாய்லாந்தில் ஒரு விநோதம்...

By Asianet TamilFirst Published Jan 31, 2019, 5:06 PM IST
Highlights

உலகம் முழுவதும் வித்தியாசமான கஃபேக்கள் உள்ளன. இவற்றில் தாய்லாந்தைச் சேர்ந்த ‘கிட் மாய் டெத்’ என்ற கஃபே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் வித்தியாசமான கஃபேக்கள் உள்ளன. இவற்றில் தாய்லாந்தைச் சேர்ந்த ‘கிட் மாய் டெத்’ என்ற கஃபே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கஃபே முழுவதும் சவப்பெட்டி, வண்ண மலர்கள், எலும்புக்கூடுகள் என்று பயமுறுத்தும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிடக்கூடிய பொருட்களுக்கு உணவின் பெயரை குறிப்பிடாமல், ‘முதுமை, வலி, நோய், மரணம்’ என்று வித்தியாசமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கஃபேவில் உள்ள சவப்பெட்டியில் படுத்துகொண்டோ எலும்புக்கூடோடு அமர்ந்தோ புகைப்படம் எடுத்தால் சிறப்பு தள்ளுபடியும் கொடுக்கிறார்கள். 

‘இன்று இரவு நீங்கள் உறங்கி மீண்டும் கண் விழிக்க முடியாத நிலைக்கு செல்லத் தயாரா?’, ‘நீங்கள் எதையும் கொண்டுவரவில்லை, அதனால் எதையும் கொண்டுபோக முடியாது’, ‘நீங்கள் உயில் எழுத விரும்பினால், அதை இப்போதே எழுதி வைத்துவிடுங்கள்’ போன்ற வாசகங்களும் கஃபே முழுவதும் வைக்கப்பட்டிருக்கின்றன. 

இப்படி ஒரு ஓட்டல் ஏன் அமைத்திருக்கிறார்கள்? “மரணம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கஃபேயை பயன்படுத்திகொள்கிறோம். இங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் பார்க்கும் போது மரணம் பற்றிய சிந்தனை வரும். உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று தோன்றும். இதனால்,  ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சியோடு வாழத் தோன்றும். ஆரம்பத்தில் எங்கள் கஃபேக்கு வரவே பயப்பட்டார்கள். இப்போது தைரியமாக வருகிறார்கள்” என்கிறார் கஃபேயின் நிறுவனர். சாப்பிட வருபவர்களை இப்படியா பயமுறுத்துவது?!

click me!