சீனாவை சும்மா விட்டுறாதீங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2021, 1:23 PM IST
Highlights

அதிபர் பிடன் நிர்வாகத்திற்கு முன் ஒரு பெரிய ராஜதந்திர சவால் உள்ளது எனவும், கொரோனா விவகாரத்தில் சீனாவின் முறைகேடுகள் மற்றும் அதன் குற்றங்களை சர்வதேச நாடுகளுடன் இணைந்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிபர் பிடனுக்கு இருக்கிறது எனவும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் பிடன் நிர்வாகத்திற்கு முன் ஒரு பெரிய ராஜதந்திர சவால் உள்ளது எனவும், கொரோனா விவகாரத்தில் சீனாவின் முறைகேடுகள் மற்றும் அதன் குற்றங்களை சர்வதேச நாடுகளுடன் இணைந்து அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அதிபர் பிடனுக்கு இருக்கிறது எனவும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தவறால் ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவின் கொடூரத்திற்கு ஆளாகியுள்ளது. கிட்டதட்ட 3.7 மில்லியன் மக்கள் இந்த வைரஸால் இறந்துள்ளது.  உலக அளவில் மிகப்பெரிய அளவில் பொருளாதார அழிவே ஏற்பட்டுள்ளது. தற்போதைய இது அனைத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும் எனில் பாதிக்கப்பட்ட சக நாடுகளை ஒருங்கிணைத்து, அதை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஜோ பிடனுக்கு உள்ளது. கடந்த நான்கு மாத நிர்வாகத்தில் அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒரளவுக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 

கடந்த மே 26 அன்று கொரோனா வைரஸ் முதன் முதலில் எங்கிருந்து உருவானது என்பதன் மூலத்தை அடுத்த 90 நாட்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் அமெரிக்க உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார், மேலும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுப்படி அந்தக் கொரோனா வைரஸ் என்பது,  சார்ஸ் பாதித்த விலங்கு அல்லது வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து  வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் அதன் உண்மையான மூலம் எது என்பது அறிய முடியாததாக உள்ளது எனவும் குழப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை அறிக்கை எதையும் பொருட்படுத்தாமல் சீனா தொடர்ந்து  இதைச் தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவருகிறது. 

ஏற்கனவே அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பல்வேறு சர்வதேச முன்னணி ஜனநாயக நாடுகளில் சந்தேகிக்கும் வகையில் பல தவறுகளை செய்துள்ளார். இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட முன்னணி ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்து ஒரு குழுவை பிடன் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. கொரோனா விவகாரத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளது, அதாவது 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில்  சீனாவில் கொரோனா வைரஸ் பரவல்,  மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தையும் மூடி மறைத்துள்ளது. சீனாவிலிருந்து அந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவ அது காரணமாயிருந்தது.  நோய் பாதித்த பகுதிகளில் இருந்து பல  பயணிகள் மூலம் அந்த வைரஸ் வேகமாக வெளிநாடுகளுக்குப் பரவியது,

இப்படிப்பட்ட அனைத்து ஆபத்துக்களும் சீனாவில் பொறுப்பற்ற செயல்பாடுகளே காரணமாக இருந்துள்ளது. சுகாதாரமற்ற சந்தையில் மூலமாகவும் அல்லது வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்தோ இந்த வைரஸ் கட்டவிழ்த்துவிடப்பட்டது எனபதற்கு ஆதாரங்கள் உள்ளது. எந்த ஒரு பொறுப்புள்ள நாடும் இதுபோன்று நடந்து கொல்லாது,  நிச்சயம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த தலைவரும் இதை ஏற்கமாட்டார். ஆனால் சீனா தன் தவறுகளை அதை ஏற்க மறுக்கிறது, வைரஸ் பரவியபோது ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு சீனா முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தது. ஆனால் உடனே பீஜிங் அந்நாட்டின் மீது வர்த்தக தடை விதித்தது.  " எங்களைப் பார்த்து அச்சப்பட வேண்டும், அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்," என்று ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகளை சீனா எச்சரித்தது,  இது சீனப் பேரரசின் பாரம்பரியத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். 

தென்சீனக்கடல் விவகாரம் தொடங்கி, சின்ஜியான் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை,  ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை,  பல கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவுசார் சொத்து திருட்டு போன்ற நடவடிக்கைகளில் இருந்து சீனா தண்டிக்கப்படாமல் தப்பித்து வருகிறது, ஆனால் உலகெங்கும் பல அப்பாவி மக்களை கொன்று குவித்த இந்த குற்றச் செயலில் இருந்தும் சீனா தப்பித்தால், அதன் நடவடிக்கைகள் மேலும் பன்மடங்கு அதிகரிக்க அது வாய்ப்பாக அமையும், எனவே நிச்சயம் அதற்கு முற்றுப்புள்ளி தேவை

இந்த இக்கட்டான நிலையில்தான் பிடன் முன்னிலையில் ஒரு ராஜதந்திர வாய்ப்பு காத்திருக்கிறது,  சீனாவால் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது,  தற்பொழுது பாதிக்கப்பட்ட நாடுகளின் கூட்டணியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், சீனாவின் அபாயகரமான வைரஸ் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தடுக்கவும்,  கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கவும், காலப்போக்கில் பாதிக்கப்பட்ட நாடுகளின்  சேதாரங்களை கணக்கிடவும், நிவாரணம் பெறவும் முன்னணி ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொருளாதார வளம் மிக்க நாடுகள் சீனாவை அதற்கு நிர்பந்திக்க வேண்டும், இதை தடுக்க தவறினால் உலகநாடுகளின் பொருளாதாரத்தை ஜி ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி தடுக்கும், எனவே சர்வதேச கூட்டணி அமைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம். 

பிடன் தலைமையிலான கூட்டணி,  சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை மற்றும் சீன  நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்ச மற்றும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டம் வகுக்க வேண்டும்.  சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த உலக நாடுகளுக்கு பொறுப்புடன் செயல்படாவிட்டால், வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சொத்துக்களை உலக நாடுகள் பகிரங்கப்படுத்த வேண்டும், மேலும் சீனாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் முறையற்ற வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் சீன நிறுவனங்களுக்கு  முன்னுரிமை அளிப்பதை சர்வதேச நாடுகள் குறைக்கவேண்டும், ராஜதந்திர நடவடிக்கையில் இறங்க வேண்டிய தருணம் இது, உலக நாடுகள் இதை உணர்ந்து முன்னெடுக்க வேண்டும், இதற்காக புதிய ஒப்பந்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் கூட இயற்றப்படலாம், 

இத்தகைய நடவடிக்கைகள் நியாயமானதாக இருக்குமா.?

அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் சீனா ஆதாரங்களை அழிக்கிறது,  மேலும் பல உண்மை தகவல்களை அது மறைக்கிறது, அதனுடைய நடவடிக்கைகள் ஆபத்தானது என நாம் கருதுகிறோம், இந்த அளவீடுகளின் அடிப்படையில் ஏற்கனவே சீனா குற்ற உணர்வில் உள்ளது, இப்படி சீனாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் சீனா நிச்சயமாக கடுமையான பதிலடி கொடுக்கும், அது சர்வதேச விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து மக்களையும் பெரிய நிறுவனங்களையும்  பாதிக்கக்கூடும்,  சீனா எடுக்கும் நடவடிக்கைகளால் நாம் எவற்றிலெல்லாம் பாதிக்கக்கூடும் என்பதை அடையாளம் கண்டு நாம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதே ஜோ பிடன் எடுக்கும் ராஜதந்திரம் நடவடிக்கைகளில் மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும். 

சீனா உலகத்தை சரியான முறையில் கையாண்டு அதன் மூலம் மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளது, அதேநேரத்தில் தன் தவறான நடத்தை மூலம் அந்த உலகத்தையே அது சீர்குலைத்துள்ளது.  சீனா முழு வெளிப்படையுடனும், தவறு நடந்தது என்பதற்கான சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்வதன் மூலம் சரியான விஷயங்களை செய்திருக்க முடியும், ஆனால் அதற்கு மாற்றாக அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்த, தற்போது பீஜிங் அமெரிக்கா மீது அவதூறாக வீசுகிறது. பல முன்னணி நாடுகள் மோதல்களை தவிர்ப்பதற்காக தங்களது இழப்புகளைகூட ஏற்றுக் கொள்ளலாம், பிடனும் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என தீர்மானிக்கலாம், ஆனால் தற்போதே அதிக காலம் ஆகிவிட்டது என்பதையே நமக்கு வரலாறுகள் காட்டுகிறது. என மைக் பாம்பியோ கூறியுள்ளார். 
 

click me!