1528ல் பாபர் தொடங்கி வைத்த சர்ச்சை... 2019ல் முடித்து வைத்த ரஞ்சன் கோகாய்... 600 ஆண்டுகளுக்கு பின் அயோத்தியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம்..!

By Thiraviaraj RMFirst Published Nov 9, 2019, 12:59 PM IST
Highlights

அயோத்தி வழக்கில் இன்று வழங்கிய தீர்ப்பு கி.பி 1528 முதல் 600 ஆண்டுகால, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டி இருக்கிறது. 

அயோத்தியில் ராம பிரான் பிறந்த ராமஜென்ம பூமியாக இந்துக்களின் புனித தலமாக போற்றப்படுகிறது.  வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை  ராமர் பிறந்த இடம் அல்லது ஜென்மபூமி என பல இடங்களில் குறிப்பிடுகின்றன. 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு அயோத்தி வனாந்திரமாக மாறியது என்று அரசிதழ் ஆவணங்கள் கூறுகின்றன. மாமன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, அவரின் தளபதி ஒருவரால் 1528-ல், பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், இது குறித்து ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பல நூல்கள் ஜென்மபூமியை ராமர் பிறந்த இடம் பற்றி குறிப்பிடும் அதே வேளையில் மசூதி பற்றி பேசியதில்லை. வேறு சில ஆதாரங்கள், இந்த மசூதியை அவுரங்கசீப் கட்டியதாக சொல்கின்றன. 1766-ல் அந்த பகுதியில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் எழுதிய குறிப்புகளில் இப்படி கூறப்பட்டுள்ளது.

மசூதி பற்றிய மிக பழைய குறிப்புகள், முதலாம் பகதூர் ஷா ஜாபர் பற்றி அவரின் மகள் அதாவது அவுரங்கசீப்பின் பேத்தி எழுதிய நூலில் உள்ளது.1850-களில் இந்துக்கள் ஒரு குழுவாக பாபர் மசூதியை தாக்கினர். அதன் பிறகு அவ்வப்போது நடைபெற்ற மோதல்கள் நடைபெற்று வந்தன.  இந்த மோதல்கள், 1980-களில் தான் பெரிய அளவுக்கு உருவெடுத்து 1992 டிசம்பர் மாதம் 6-ம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

அதன் பிறகு நீதிமன்றம், சமரசக்குழு பேச்சுவார்த்தை பிரச்சினை நகர்ந்து வந்தது. ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஓய்வு பெற சில நாட்களே உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம். பாபர் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்.  

 

click me!