அயர்லாந்தில் இந்தியரின் ஆடையைக் கிழித்து தாக்கிய இனவெறி கும்பல்

Published : Jul 23, 2025, 06:34 PM IST
Embassy of India, Dublin, Ireland

சுருக்கம்

டப்ளினில் 40 வயது இந்தியர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தூதர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் உள்ள டலாக்ட் பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அவரது ஆடைகள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தாக்குதலுக்கு உள்ளானவர் முகத்திலும், கை, கால்களிலும் பலத்த காயங்களுடன் ரத்தம் வழியக் காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் டலாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அயர்லாந்து தேசிய காவல்துறையான 'கர்தாய்' (Gardai) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தியத் தூதரின் கருத்து

இந்த தாக்குதல் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த அயர்லாந்துக்கான இந்திய தூதர் அகிலேஷ் மிஸ்ரா, "சாதாரண தாக்குதல் இவ்வளவு பெரிய காயத்தையும், ரத்தப்போக்கையும் எப்படி ஏற்படுத்தும்?" என்று கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு அளித்த அயர்லாந்து மக்களுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்த அவர், குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கவுன்சிலரின் கோரிக்கை

தாக்குதலுக்கு உள்ளானவர், மூன்று வாரங்களுக்கு முன்புதான் அயர்லாந்துக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் கவுன்சிலர் பேபி பெரெப்படன், பாதிக்கப்பட்டவரைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் அதிர்ச்சியில் இருப்பதால் அதிகம் பேச முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

டலாக்ட் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்தியர்கள் பலர் அயர்லாந்தில் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றுவதற்காகவும், படிப்பதற்காகவும் வருவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டப்ளின் தென்மேற்கு பகுதியின் சின் ஃபெய்ன் கட்சியைச் சேர்ந்த சீன் க்ரோவ், இந்த தாக்குதலை இனவெறி தாக்குதல் என்று கண்டித்துள்ளார். "இத்தகைய வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும், "புதிதாக வந்தவர்கள் அல்லது பல காலமாக வாழ்ந்து வருபவர்கள் என யாராக இருந்தாலும் சரி, இந்த வன்முறை காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள்" என்றும் அவர் கூறினார்.

இந்தியர் தாக்கப்பட்டது ஏன்?

சிறார் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், இந்த தாக்குதல் இனவெறித் தாக்குதலாக விசாரிக்கப்படுவதாகவும் 'தி ஐரிஷ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அயர்லாந்து நீதித்துறை அமைச்சர் ஜிம் ஓ'கல்லகன், வெளிநாட்டவர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது தனக்குத் தெரியும் என்றும், குற்றவியல் வழக்குகளில் சிறையில் உள்ள வெளிநாட்டவர்கள் குறைவு என்றும் சுட்டிக்காட்டினார். "குற்றச் செயல்களில் வெளிநாட்டவர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மை இல்லை" என்றும் அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!