இந்திய இறையாண்மையை மீறி, சீனா-பாகிஸ்தான் பொருளாதார நெடும்பாதை உருவாக்கப்பட்டு வருவதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி அருகே அமைந்துள்ள Gwadar துறைமுகத்தை மேற்கு சீனாவுடன் இணைக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி டாலர் செலவில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார நெடும்பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.
சாலை மற்றும் ரயில் பாதை மூலம் இவ்விரு பகுதிகளும் இணைக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை, இந்திய இறையாண்மைக்கு எதிரானது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவை சுற்றி வளைக்கும் வகையில் உருவாகும் இந்த பொருளாதார நெடும்பாதை மூலம், இந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி போராடிவரும் பலுசிஸ்தான் மாகாணம் வழியாகவும் இத்திட்டம் அமையவிருப்பதால், அப்பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அமைதிச் சூழலை பாகிஸ்தான் உருவாக்கினால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒருபோதும் மறுத்ததில்லை என குறிப்பிட்டார். (5179)
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் Bosnia-வில் சுற்றுப் பயணம் செய்தபோது, இந்தியாவுடனான பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வுகாண பாகிஸ்தான் விரும்புவதாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.