#UnmaskingChina: படைகளை திரும்பப் பெற இருநாட்டு ராணுவமும் சம்மதம்..ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2020, 6:06 PM IST
Highlights

இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள  பதற்றத்திற்கு இடையில் ஜூன்-22 அன்று  இந்திய-சீன லெப்டினன்ட் கமாண்டர் நிலை அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும்,

இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள  பதற்றத்திற்கு இடையில் ஜூன்-22 அன்று  இந்திய-சீன லெப்டினன்ட் கமாண்டர் நிலை அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், அதில் இரு நாடுகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பபெற ஒப்புக் கொண்டதாகவும்  ராணுவ  வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.  கல்வான் பள்ளத்தாக்கில்  சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி எல்லையில் சீனா ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையில் ஜூன்-15  இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம்  தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் சீனாவுக்கு எதிராக கொந்தளித்து வருகிறது, எல்லையில் இருநாடுகளும் படைகளை குவித்து வருவதால் எந்தநேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லெப்டினன்ட் கமாண்டர் நிலை அதிகாரிகளுக்கு இடையே உரையாடல் நடந்துள்ளது. அதில் நல்ல முடிவுகள் எட்டப்பட்டுள்ளது எனவும் தகவல்வெளியாகியுள்ளது.

 

இருநாடுகளும் வீரர்களை திரும்ப பெற்று கொள்வதாகவும் குறிப்பாக இந்திய-சீன படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக, புதிய தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இந்த உரையாடல் மிகவும் நேர்மையாகவும், மிகவும் சிறந்த சூழலில் நடந்தன என்றும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.  எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இருநாடுகளும் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கும்  பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் கமாண்டர் மட்டத்திலான இந்த உரையாடல் கிழக்கு லடாக்கில் சீன எல்லையான சுஷிலுக்கு கீழே உள்ள மால்டோவாவில் நடைபெற்றது. 15 ஆம் தேதி சம்பவத்திற்குப் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதும், அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதும் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 

click me!