அடித்து நொறுக்கப்பட்ட இந்து கோவில்கள்.. பாகிஸ்தானில் பதற்றம்!!

By Asianet TamilFirst Published Sep 16, 2019, 4:23 PM IST
Highlights

பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியர் ஒருவர் முகமது நபி குறித்து தவறாக பேசியதாக அங்கிருக்கும் இந்து கோவில்கள் இஸ்லாமிய அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் குடியேறிய இந்துக்களால் அங்கு கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இருநாட்டுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படும்போது அந்த கோவில்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே தற்போது அங்கு கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானில் இருக்கும் சிந்த் பகுதியைச் சேர்ந்தவர் நோட்டன் மால். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நோட்டன் மாலைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சிந்த் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

மேலும் சிந்த் பகுதியில் இருக்கும் இந்து கோவில்களையும் இஸ்லாமிய அமைப்பினர் தாக்கி இருக்கின்றனர். இதையடுத்து இந்து கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சார்பில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானில் இந்து மத கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

click me!