
ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் ஹைமா என்ற பயங்கர சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்த புயலால் சுமார் 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 220 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசுவதால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஃபிலிப்பைன்சில், ஹைமா என்ற பயங்கர சூறாவளி வீசி வருகிறது. அந்நாட்டின் வடகிழக்குப் பகுதி இப்புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. புயல் தாக்குவதற்கு முன்னரே ஃபிலிப்பைன்ஸ் சூறாவளி மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், சுமார் 60 ஆயிரம் பேர் புயல் மற்றும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் மழை வெள்ளத்திலிருந்து மீட்டகப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
7 மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் பேர் வடமேற்குப் பகுதியில் சீன கடற்கரையோரமாக இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 220 கிலோ வேகத்தில் வீசும் ஹைமா புயல் தற்பொழுது சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.
அந்நாட்டின் Guangdong மாகாணத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்புயல் மேலும் வலுவடைந்து 315 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசக்கூடும் என சூறாவளி கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இப்புயல் இந்த ஆண்டில் நிகழ்ந்த 3வது மிகப்பெரிய புயல் என கணிக்கப்பட்டுள்ளது.