கொரோனாவை கூட சமாளிக்கலாம் ஆனால் இந்ந கொடூரத்தை உலகம் எப்படி தாங்கும்..?? ஐ.நா மன்றம் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2020, 2:21 PM IST
Highlights

மேலும் 2020ஆம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,  கொரோனா நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் பட்டியலில் 8.3 முதல் 13.2 மில்லியன் மக்கள் ஆபத்து கட்டத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் எதிரொலியாக,  2020 ஆம் ஆண்டில்  ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன் மடங்கு உயரும் அபாயம் உள்ளதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது. சுமார் 8.3 முதல் 13.2 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து  குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், கிட்டத்தட்ட 180 க்கும் அதிகமான நாடுகளில் தனது  கொடூரத்தை பரப்பி உள்ளது.  இதில் லட்சக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். உலகளவில் இதுவரை 1 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 78 லட்சத்து 55 ஆயிரத்து 838 பேர் சிகிச்சைப் பெற்று வைரசிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 

இந்த வைரஸை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் உலக நாடுகள் எத்தனையே முயற்சிகளை மேற்கொண்டும் இந்த வைரசின் தாக்கம் கொஞ்சமும் குறையவில்லை. பிரத்யேக தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ உலகம் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக  பல்வேறு நாடுகளில் ஊடரங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில்  லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதரம் இழந்து  அன்றாட உணவுக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இது குறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இன்றும் சில மாதங்களுக்கு  இதே நிலை தொடர்ந்தால் 2020ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 8.3 முதல் 13.2 மில்லியனாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.  உலகெங்கிலும் கொரோனா தொற்று நோயால் பட்டினியும், வறுமையும் அதிகரித்து  வருவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை எதிர்வரும் காலத்தில் உணவு பற்றாக்குறையால் ஏற்படப்போகும் ஆபத்துகள் குறித்தும் கவலை வெளிபடுத்தியுள்ளது. 

மேலும் 2020ஆம் ஆண்டில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,  கொரோனா நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் பட்டியலில் 8.3 முதல் 13.2 மில்லியன் மக்கள் ஆபத்து கட்டத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியால் வருமான இழப்பு காரணமாக ஏழை மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது,  தற்போது சுமார் 69 கோடி மக்கள் போதிய உணவு இன்றி பட்டினியை எதிர்கொள்கின்றனர், அதாவது உலக மக்கள் தொகையில் 8.9 சதவீதம் பேர் உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பே பட்டினியை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 60 மில்லியனாக அதிகரித்திருந்தது, இதன் நிலை அடுத்தடுத்த காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் 2 பில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு சத்தான அல்லது போதுமான உணவு இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  
 

click me!