கொரோனாவை காரணம் காட்டி ட்ரம்ப் எடுத்த அதிரடி முயற்சி..!! அதிபர் தேர்தலை தள்ளி வைக்க பரிந்துரை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2020, 8:27 PM IST
Highlights

ஆனால் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது. அதில் நான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றேன் என அவர் கூறியுள்ளார். தான் வெற்றி பெறுவேன் என்பதில்  நம்பிக்கையுடன் இருந்து வரும் ட்ரம்ப், 

மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று பதவியில் தொடர்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ளதால் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இது வாக்களிப்பதற்கு சரியான நேரமில்லை என கூறியுள்ள அவர், மக்கள் சரியாக பாதுகாப்பாக வாக்களிக்கும் வரை, தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க அரசியல் களத்தில் திடீர்  திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தப் பேரிடர்க்கு  மத்தியிலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற நவம்பர்3- ஆம் தேதி,  ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் காண்கிறார். 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸை முறையாகக் கையாளவில்லை என்றும், அதனால் நாட்டில் வரலாறு காணாத பொருளாதார சரவும், வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுங்கட்சியை ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா வைரஸ் விவகாரம், ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும், இது அவர் தேர்தலில்  தோல்வியை சந்திக்ககூட ஒரு காரணமாக அமையக்கூடும் என்றும் கருத்துகள் நிலவுகிறது. இந்நிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ட்ரம்ப் நம்பிக்கை வெளிபடுத்தியுள்ளார்.  இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா வைரஸுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம், நிச்சயம் அது நல்ல பலனை தரும். தேர்தலில் நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவேன். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கூட கருத்துக்கணிப்புகள் எனக்கு எதிராகவே இருந்தது. 

ஆனால் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது. அதில் நான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றேன் என அவர் கூறியுள்ளார். தான் வெற்றி பெறுவேன் என்பதில்  நம்பிக்கையுடன் இருந்து வரும் ட்ரம்ப், திடீரென ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த  பரிந்துரைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடனை விட  பின்தங்கி உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வரும் நிலையில், மனச்சோர்வுக்க ஆளாகி உள்ள ட்ரம்ப், வைரஸை மேற்கோள்காட்டி அதிபர் தேர்தலை  ஒத்தி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கடுமையான கொரோனா தொற்றுக்கு மத்தியில் வாக்களிப்பது சரியாக இருக்காது, மக்கள் சரியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று எதிரொலியாக நாடு தழுவிய அளவில் அஞ்சல்  வழியாக  வாக்களிப்பது, அதன்மூலம் அதிபரை தேர்ந்தெடுப்பது  தவறான, போலித்தனமான தேர்தலாக இருக்கும். இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சங்கடமாக அமையும் எனவும் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். மேலும் இயல்பு நிலை திரும்பும் வரை தேர்தலை தாமதபடுத்துகிறீர்களா??? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!